வெள்ளி, 5 ஏப்ரல், 2013

சகாவின் பயணக் குறிப்புகள்….


பகாடியாக்களை தேடி…..
மானுடவியல் துறையில் பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பழங்குடியினரின் வாழ்க்கை முறைப் பற்றி களஆய்வு செய்ய வேண்டும்.அது அந்தப் படிப்பிற்கு ஏதுவான விடயம் என்பதால் மானிடவியல் துறையில் அந்த களஆய்வு முதன்மையான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் சென்னை பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறை மாணவர் என்ற வகையில் நானும் என்னுடன் பயிலும் மரியன் பிரசாத், அம்மு காயத்ரி, விபா ருக்மிணி, அசாங் ஆகியோர் ஏதாவது ஒரு பழங்குடியினரைப் தேடிப்போக முடிவு செய்தோம்.

இதற்கு முன் இத்துறையில் பயின்ற மாணவர்கள் பெரும்பாலும் தென்மாநிலங்களில் உள்ள பழங்குடியின மக்களையே இதுவரை களஆய்விற்கு எடுத்துக் கொண்டுள்ளனர். அதனால் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பகாடியா என்ற மக்களை சென்று பார்ப்போம் என்று நண்பன் மரியன் சொல்ல மற்றவர்கள் ஏற்றுக் கொண்டோம். அதற்கான ஏற்பாடுகளை அவரே செய்யத் தொடங்கினார்.

எங்களின் துறைத்தலைவர்(பொ) முனைவர் சுமதி அவர்கள் எங்களுக்கு பலமுறை எப்படி களஆய்வு செய்வது மக்களிடம் எப்படி அணுகுவது, யாரார் என்ன தலைப்பில் ஆய்வு செய்வது என்பது உள்ளிட்ட பலவற்றை அக்கறையோடு கற்றுக் கொடுத்தார்.

இறுதியாக காட்டுநிலம் என்ற பொருள்பட விளங்கும் ஜார்கண்ட் மாநிலத்தின் பக்கூர் மாவட்டத்தில் உள்ள ராஜ்மகல் என்ற மலைத்தொடரில் வசிக்கும் பகாடியா என்னும் பழங்குடியின மக்களின் வாழ்நிலையைப் பற்றி அறிந்துகொள்ளும் எங்களது களப்பணி கிட்டத்தட்ட 20நாட்கள் மேற்கொள்வது என்ற ஒப்புதலுடன் பயணத்திற்கு தயாரானோம்.
இந்த நாட்களில் என்னுடைய இதழ் பணி முற்றிலும் தடைபடும் என்கிற நிலையில், இந்தப் பயணத்தை மேற்கொள்வது மிக அவசியமான ஒன்றாகவே நான் கருதினேன். அதற்கான காரணம், வட மாநிலங்களுக்கு நான் மேற்கொள்ளும் முதல் பயணம். அதுவுமில்லாமல் அந்த பயணம்கூட சுற்றுலா செல்வதுபோல் ஓரிரு நாள்கள் என்றில்லாமல் 20நாட்கள் சம்பந்தப்பட்ட மக்களுடனேயே தங்கியிருந்து மேற்கொள்ளும் களப்பணி, பல அனுபவங்களைப் பெற்றுத்தரும் என்பதுதான்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 21-ம் நாள் இரவு சென்னையில் இருந்து ஹவுரா (கொல்கத்தா) செல்லும் ஹவுரா விரைவு தொடரியில் எங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல் முறையாக வடஇந்தியா செல்லும் காரணத்தால் சற்றே அவசரகதியில் முன்னேற்பாடுகள் இன்றியே சென்றேன்.சென்னை நடுவம் தொடரி நிலையத்திற்கு எனக்கு முன்னமே வந்து காத்திருந்த நண்பர்களுடன் சென்று எங்களுக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டோம். எங்களை வழியனுப்ப நண்பர்கள் உதயகுமார், அருண் ஆகியோர் வந்திருந்தனர்.

சரியாக இரவு 11.50மணிக்கு நாங்கள் இருந்த ஹவுரா விரைவு வண்டி கிளம்பியது.தென் மாநிலங்களில் தொடரியில் பயணம் மேற்கொள்வதற்கும், வட பகுதியில் பயணம் மேற்கொள்வதற்கும் எத்துனை வேறுபாடு என்பதைப் பற்றி நான் கேள்வி மட்டுமே பட்டிருக்கிறேன். அதை கண்கூடாக காணும் வாய்ப்பு கிடைத்தது. சரியாக இருபத்தெட்டு மணிநேர பயணத்திற்குப் பிறகு 23ந் தேதி அதிகாலை 4.30மணிக்கு நாங்கள் ஹவுரா(கொல்கத்தா) சென்று சேர்ந்தோம். 

அங்கே இரண்டு மணிநேர ஓய்விற்குபின் ஜார்கண்டில் உள்ள பக்கூர்(Pahur) நிலையத்திற்கு செல்லும் தொடரியைத் தேடி கண்டுபிடித்து அமர்ந்து கொண்டோம். அந்த வண்டியிலும் எங்களுக்கான முன்பதிவை செய்திருந்ததால் நாங்கள் அந்தந்த இடத்தில் அமர்ந்து கொண்டோம்.வண்டி கிளம்ப ஆரம்பித்த பின்னர்தான் தெரிந்தது அது பயணிகள் வண்டி என்று. என்ஜினோடு சேர்த்து மொத்தமே அய்ந்து பெட்டிதான் அந்தத் தொடரியில் இருந்தது. கிட்டத்தட்ட எட்டு மணிநேரம் பயணம் செய்தபின் நாங்கள் இறங்கவேண்டிய பக்கூர் நிலையத்தில் எங்களை துப்பிவிட்டு அந்த தொடரி தனது பயணத்தைத் தொடர்ந்தது. (அந்த இரண்டு தொடரிப் பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களைப் பின்னர் கூறுகிறேன்.)

அந்த பக்கூர் நிலையத்தில் எங்களை வரவேற்று அழைத்துச் செல்ல அந்நிலையத்திற்கு அருட் தந்தை பெரிய நாயகம் என்பவர் வந்திருந்தார். சந்தேகமே பட வேண்டாம் அவர் தமிழர்தான்.நீண்ட காலமாக அப்பகுதி மக்களுக்கு இறைப்பணி செய்ய அங்கேயே தங்கியிருக்கிறாராம். பக்கூர் நகரத்தை அடுத்துள்ள தொடை (Torai) என்ற கிராமத்தில் CTC-யை (CATECHISTS TRAINING CENTRE ) நிருவகித்து வரும் அவர், எங்களை அவரது வாகனத்தில் அந்த மய்யத்திற்கு அழைத்துச் சென்றார். மய்யத்தில் இருந்த மற்ற அருட் தந்தைகள் சாக்கோமற்றும் பிரான்சிஸ் ஆகியோரை அறிமுகப்படுத்தினார். நாங்கள் சென்ற நேரம் மாலை 4மணி என்றபோதும் எங்களுக்கு நல்ல உணவு அங்கே ஏற்பாடு செய்திருந்தார்கள். இவர்களில் பகாடியா மக்களிடம் அதிகம் நெருங்கிப்பழகி அவர்களைப் பற்றிய புத்தகம் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதியவர் அருட் தந்தை சாக்கோ என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் பகாடியா மக்களை நாங்கள் எப்படி அணுக வேண்டும் அவர்களின் வாழ்வு முறைகள் என்ன என்பது போன்ற பல தகவல்களை அன்றிரவு எங்களுக்கு எடுத்துக் கூறினார். பின்னர் பயணக் களைப்பினால் நாங்கள் ஓய்வெடுத்தோம். அந்த இரவு சற்று குளிர்தான் என்றாலும் கதகதப்பான கம்பளியின் உதவியால் சமாளித்துக் கொண்டேன். காலை உணவிற்குப் பிறகு பகாடியா மக்களின் வாழ்விடத்திற்கு செல்ல வேண்டும் என்று துரிதப்படுத்தினார் சாக்கோ.நாங்கள் தங்கியிருந்த பக்கூரில் இருந்து 40கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ராஜ்மகல் என்கிற மலைத்தொடரை நோக்கி எங்களை அழைத்துச் சென்றார்.

முதலில் நாங்கள் சென்ற இடம் சத்யா என்ற கிராமம். அங்குதான் நாங்கள் தங்கியிருந்து களஆய்வு செய்ய வேண்டும்  என்பதை தாமதமாகத்தான் தெரிந்து கொண்டேன். சத்யா என்கிற அந்த கிராமத்தில் பகாடியா சேவா சமிதி கேந்திரா (Paharia Seva Samithi Kendira) என்கிற நிறுவனத்தின் இயக்குநர் அருட் தந்தை டியோனஸ் மற்றும் அங்கு செயல்பட்டுவரும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட் தந்தை மரியனோஸ் மற்றும் சகோதரிகள் மேக்டலின், நீலமணி ஆகியோருடன் அங்கு பணியாற்றும் சேவியர் உள்ளிட்டோர் எங்களை இன்முகத்துடன் வரவேற்றனர். அந்த இன்முக வரவேற்பு விருந்தோம்பல் பாங்கு நாங்கள் அங்கு தங்கியிருந்த நாட்கள் முழுவதும் நீடித்தது. அந்தளவு எங்களை நன்றாக கவனித்துக் கொண்டார்கள்.

எங்கள் அனைவரின் பரஸ்பர அறிமுகப் படலத்திற்குப் பிறகு அங்கு எங்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். உணவை பற்றி குறிப்பிடும் போது உள்ளபடியே மகிழ்ச்சி ஏற்படுகிறது. காரணம் அங்கிருந்த நாள்வரை எனக்கு தமிழ்நாட்டின் முதன்மை உணவான சோறு கிடைத்ததுதான்.அதனால் வெளிமாநிலத்தில் இருக்கும் உணர்வே ஏற்படவில்லை.

உணவிற்குப் பிறகு சாக்கோ விடைபெற்றுச் சென்றார். அதன்பிறகு டியோனஸ், மரியனோஸ் ஆகியோர் சத்யா கிராமத்தின் தன்மைகளைப் பற்றியும் அங்கு நடத்தப்பட்டு வரும் பள்ளியின் பணிகளைப் பற்றியும் விளக்கினர். அன்றைக்கு சந்தை நாள் என்பதால் என்னையும் மரியனையும் அழைத்துக் கொண்டு சென்றார் அருட்தந்தை டியோனஸ். நாங்கள் சாக்கோவுடன் வரும் பொழுதே ஜார்கண்டின் சாலைகளின் அவலத்தையும் போக்குவரத்து சிரமங்களையும் பார்த்தோம் என்றாலும், இப்பொழுது நாங்கள் பார்க்கும் பொழுது மாநிலத்தில் உள்ள மக்கள் எத்தனை பெரிய சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்தது.

அந்த அவலத்தை நேரில் கண்டதும் தமிழ்நாடு எத்தகைய முன்னேற்றத்தை  கண்டிருக்கிறது என்று எண்ணிப்பார்க்கத் தூண்டியது. ஜார்கண்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் அவலமே ஒட்டுமொத்த மாநிலமும் எப்படிபட்ட முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்பதை காட்டுவதாக இருந்தது. குண்டு குழியுமான சாலைகளில் அந்த மக்கள்படும் அவதிகள் கொஞ்ச நெஞ்சமல்ல. மருந்திற்குக் கூட அரசுப் பேருந்துகள் கிடையாது.மாற்றாக தனியார் வாகனங்கள்தான்.

சிற்றுந்து, வேன், ஜீப் உள்ளிட்டவைகளில்தான் அப்பகுதி மக்கள் தொங்கிக் கொண்டும் வண்டிகளின் மேல் அமர்ந்து கொண்டும் செல்கிறார்கள்.இந்த தொங்கலில் ஆண்-பெண் வேறுபாடெல்லாம் கிடையாது.இதைப் பார்க்கிற பொழுது சென்னையில் மாநகரப் பேருந்துடன் ஒப்பிட வேண்டியிருக்கிறது. சென்னையில் படிக்கும் மாணவர்கள் தங்களுடைய ஹீரோயிசத்தை காட்ட, பேருந்தின் கூரைமீது ஏறி ஆட்டம் போடுவதும், படிகளில் தொங்குவதும் பாட்டுப்பாடுகிறோம் என்கிற பெயரில் கத்தி கூச்சலிட்டு அட்டகாசம் செய்து பொதுமக்களுக்கு சிரமத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், ஜார்கண்டில் உள்ள மக்கள் வறுமையின் காரணமாக சிரமப்பட்டு பயணம் மேற்கொள்கிறார்கள். கொடுமை என்னவென்றால் அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் தங்கள் பயணத்திற்கு பயன்படுத்தும் வாகனங்களில் முதன்மையானது எதுவெனில் நடராஜா சர்வீஸ்தான். ஆம், கால்நடைப் பயணத்தைத்தான் அதிகமான மக்கள் மேற்கொள்கிறார்கள்.கால்நடையோடு கால்நடையாக பெரும்பாலான மக்கள் பொதி சுமந்து செல்லும் காட்சி மனதை பிசைவதாக இருந்தது.

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டும் படம் பிடித்துக் கொண்டும் சத்யாவிலிருந்து 20கிலோ மீட்டர் தள்ளியிருக்கிற கிரன்பூர் என்ற சிறுநகரத்தில் நடக்கும் சந்தையை நாங்கள் அடைந்தோம். சந்தையில் இன்னும் பல ஆச்சரியங்கள் எங்களுக்காக காத்திருந்தது. அவை……
-தொடரும்

திங்கள், 1 ஏப்ரல், 2013

மக்களை சுரண்டும் மெகா மால்கள்



ஹைடெக் மெகா சிட்டி என்கிற திட்டத்தோடு வளர்ந்து வரும் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில்வெகு வேகமாக பரவிவருகிறது மெகா மால் (Mega Malls) பிரம்மாண்டமான கட்டடம், எந்நாளும் தடையில்லா மின்சாரம், ஒளி வெள்ளத்தில் மொத்தமும் குளிரூட்டப்பட்ட வளாகம். ஒவ்வொரு மாலிலும் மிகப்பெரிய விளையாட்டு வளாகம், உணவு வளாகம் பல்வேறு வணிக நிறுவனங்கள் இவற்றோடு திரையரங்குகள் என்று மக்களிடம் கல்லா கட்டுவதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் மெகா மால்கள்.

தற்போது இயங்கிவரும் மால்களுடன் அடுத்த சில ஆண்டுகளுக்குள்ளாக சுமார் இருபது மால்களுக்கு மேல் சென்னையில் திறக்கப்பட இருக்கிறது. அதற்கான பணிகளை பெருமுதலாளிகள் போட்டிபோட்டுக் கொண்டு அதிவேகமாக செய்து வருகிறார்கள். சென்னையைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் இரண்டாம் கட்ட நகரமான கோவை உள்ளிட்ட ஒருசில நகரங்களிலும் மெகா மால்கள் தியேட்டர்களோடு திறக்கப்பட்டிருக்கிறது.
இப்படி திறக்கப்படும் மால்களின் கொள்கையெல்லாம் ஒற்றைக் குறிக்கோளைக் கொண்டதுதான். அதாவது, எப்படியாவது மக்களின் கேலிக்கை நுகர்வை மூலதனமாகக் கொண்டு காசாக்கிப் பார்க்க வேண்டும் என்பதுதான். இதனால் அங்கு செல்லும் மக்களிடம் பகல் கொள்ளையாக பணம் பறிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாய்உணவு, விளையாட்டு வளாகங்களில்.
ஒவ்வொருமெகா மாலிலும்  ஒருதளம் முழுவதும், உணவு மற்றும் விளையாட்டு வளாகம் இருக்கும். இந்த உணவு வளாகத்தில் பத்திலிருந்து அய்ம்பது கடைகள் வரை ஒவ்வொரு மாலின் அளவுக்கு ஏற்றார்ப்போல இருக்கும். சைவம், இறைச்சி, இந்தியன், தந்தூரி, சைனீஸ், என்று உலக அளவிலான உணவு வகைகள் தருவதாய் சொல்லி முழுக்க முழுக்க இந்திய உணவை தந்து கொண்டிருப்பார்கள். இந்த உணவகங்களில் உணவு ருசியாக இருக்கிறதோ இல்லையோ ஒவ்வொரு உணவின் விலையும் மயக்கம் போட்டு விழச் செய்து விடும்
எடுத்துக்காட்டிற்கு சங்கீதா என்கிற சைவ உணவகத்தில் ஒரு தோசையின் விலை 30ரூபாய். அதே உணவகம் மெகா மாலில் அதே தோசையை 80ரூபாய்க்கு மேலாக விற்கிறது. இதுதான் மெகா மால்களின் மெகா மோசடி திட்டமாகும். அந்தத் திட்டத்தையும் எப்படி செயல் படுத்துகிறார்கள் என்பதுதான் உச்சம். எப்படியெனில் இம்மாதிரியான உணவகங்களில் நாம் சாப்பிட வேண்டுமென்றால் அந்தந்தக் கடைக்கு நேரடியாய்போய் நாம் பணம் கொடுத்து உண்ண முடியாது. அதற்கு தனியான செலுத்துமிடம் (கவுன்டர்) ஒன்று இருக்கும் அங்குபோய் குறைந்தபட்சம் நூறுரூபாய் கொடுத்து ஒரு சூட்டிகை அட்டை  (Smart Card) வாங்கிக் கொள்ள வேண்டும்.

அந்த சூட்டிகை அட்டை  (Smart Card)க்கு பத்திலிருந்து இருபது ரூபாய் சேவைக் கட்டணமாக எடுத்துக் கொள்வார்கள். நாம் எவ்வளவு ரூபாய்க்கு வேண்டுமானாலும் அதில் சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும். அப்படி சார்ஜ் ஏற்றிய கார்டை எடுத்துக்கொண்டு தண்ணீர்கூட கொடுக்கப்படாத கடைகளில் அவர்களிடம் நாம் ஆர்டர் செய்யும் உணவுகளுக்கான பணத்தை அந்த கார்டில் தேய்த்து கழித்துக் கொள்வார்கள். சரி.. ஆயிரம் ரூபாய்க்கு சார்ஜ் செய்த கார்டில் சுமார் 800ரூபாய்க்கு சாப்பிட்டாகிவிட்டது. மீதமிருக்கும் இருநூறு ரூபாயில் 20ரூபாய் அட்டைக்கான கட்டணமாக கழிக்கப்பட்டிருக்கும். இவை போக மிச்சமிருக்கும் பணத்தைத் திரும்பக் கேட்டால், பணத்தைத் தராமல் சார், இது வாழ்நாள் அட்டைநீங்கள் எப்போது வந்தாலும் மீதமிருக்கும் காசில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்பார்கள்.
நான் வெளியூரிலிருந்து வருகிறேன் திரும்ப வருவது சந்தேகம்தான் அதனால் எனக்கு காசைக் கொடுங்கள் என்று கேட்டால்எங்கள் சட்டப்படி அப்படியெல்லாம் கொடுக்க முடியாது என்பார்கள். நாம் கடைக்காரரிடம் நேரடியாய் கொடுக்காமல் இப்படி செலுத்துமிடத்தில் (Counterபணம் கட்டி சார்ஜ் ஏற்றி சாப்பிடுவதால் நமக்கு என்ன பயன் என்றே புரியவில்லை. அட்டையினால் ஏதாவது கழிவு கிடைக்கிறதா? வாழ்நாள் என்பதுயாருடயவாழ்நாள் வரைக்கும். மீதமிருக்கும் காசை ஏன் தரமாட்டேன் என்கிறார்கள்? அந்த காசுக்கு ஏதாவது வட்டி தருவார்களா? என்பது போன்ற கேள்விகளை பெரும்பாலும் யாரும் கேட்பதில்லை.
குறிப்பாக ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவர்களும், கல்லூரி மாணவ  மாணவிகளும் வரும் இடத்தில் இப்படி பத்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் சண்டையிடுவது கவுரவக் குறைச்சலாய் நினைத்துக்கொண்டு அவர்கள் சொல்வதையெல்லாம் எதிர் கேள்வி கேட்காமல் வேதவாக்காய் கேட்டுத் திரும்பிச் செல்கிறார்கள்.
இந்த அட்டை(Smart Cardமுறையில் பிரபல உணவகங்களான, கே.எப்.சி, மெக்டொனால்ட், பிட்ஸாகார்னர், மற்றும் வடஇந்திய ஜெயின் உணவங்கள் வரவே வராது. அவர்களுக்கென்று தனியான பணம் செலுத்துமிடம் இருக்கிறது அவற்றின் மூலம்தான் பணத்தைக் கொடுத்து அட்டையை வாங்க வேணடும். இந்த அட்டையினால் எந்தவிதமான உபயோகமும் வாடிக்கையாளர்களுக்கு கிடையாது. இதுமுழுக்க, முழுக்க, மாலில்உணவு வளாகம் நடத்துபவர்களுக்கும், கடைக்காரர்களுக்குமானது. அதாவது அங்கிருக்கும் ஒவ்வொரு கடையில் நடக்கும் வியாபாரத்தில் 20முதல் 30விழுக்காடு வரை உணவு வளாகம் நடத்துபவர்களுக்கு சென்றுவிடுகிறது.
இவர்களுக்குள் ஒரு இணைப்பை வைத்துக்கொண்டு, வாடிக்கையாளர் களிம் காசை மால் நிர்வாகம் வாங்கிக் கொண்டுவிடும். ஒருமாதம் கழித்து ஒவ்வொரு வருட கணக்கிலும் எவ்வளவு வியாபாரம் ஆகியிருக்கிறது என்று கணக்குப் பார்த்து அதில் அவர்களுக்கு வரவேண்டிய விழுக்காட்டை எடுத்துக்கொண்டு மீதித் தொகையை கடைக்காரர்களுக்கு தருவார்கள். இவர்களிடம் வாடகை மற்றும் பராமரிப்பு என்று தனியாய் வாங்கும் மால்களும் உண்டு. இவர்களின் வருமானத்துக்காக, கணக்கு வழக்குகளை சரிபார்க்க உதவும் இந்த கொள்ளைக்கு நம்மிடம் இவர்கள் இருபது ரூபாய் வாங்குகிறார்கள்.
எடுத்துக்காட்டிற்கு ஒருநாளைக்கு 4ஆயிரம்பேர் உணவு வளாகத்தில் சாப்பிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 10ரூபாய் மீதம் வைத்திருக்கிறார்கள் என்று வைத்தால்கூடஒருநாளைக்கு 40ஆயிரம்ருபாய். ஒருமாதத்திற்கு12 லட்சம். ஒருஆண்டிற்கு14கோடியே40லட்சம்ரூபாய் வரும். இதில் வாழ்நாள் உறுப்பினர் என்ற வகையில் திரும்ப வந்து சார்ஜ் செய்து சாப்பிடும் வாடிக்கையாளர்கள் சுமார் பத்து விழுக்காடு இருந்தால்கூட ஆச்சரியம்தான். அப்படியென்றால் மீதமிருக்கும் சூட்டிகை அட்டை(Smart Card) உறுப்பினர்களின் பணம் முழுவதும் மால்களின் கையில்.
இப்படி இவர்களிடம் சேரும் பணத்திற்கு வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது வட்டியோ அல்லது சலுகையோ தருகிறார்களா? என்று பார்த்தால் ஒன்றுமில்லை. இந்த பகல் கொள்ளையை பெரும்பாலும் யாரும் தட்டி கேட்பதேயில்லை.

இதைப்போலவே விளையாட்டு வளாகத்தின் கதையும் நடக்கிறது. அதே சூட்டிகைஅட்டை(Smart Card) அதே சார்ஜ் ஏற்றல் அதே முறையில் பணம் பிடுங்கல் என்று தொடர்கிறது. என்ன ஒன்று குழந்தைகளோடு வருபவர்களின் பாடுதான் படுதிண்டாட்டமாக போய்விடுகிறது. இந்த விளையாட்டு வளாகத்தில் நுழையும் குழந்தைகள்  ஒவ்வொருவரும் அவர்களது பெற்றோர்களின் பணத்தை குறைந்தபட்சம் 500ரூபாயாவது காலி செய்துவிடுகிறார்கள். விளையாட்டுக்காக அட்டையில் தேய்த்தது போக மீதியுள்ள பணத்தை உணவகத்தைப் போல இங்கேயும் திரும்ப வாங்க முடியாது.
அதிலும் சட்டமாய் தரமுடியாது என்று அறிவிப்பு பலகை வேறுபோட்டு வைத்திருக்கிறார்கள். நம் காசை நம்மிடம் கொடுப்பதில் என்ன கடினம் அவர்களுக்கு?. அதைதரமாட்டேன் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?. நாங்கள்  அறிவிப்பு பலகை வைத்துத்தான் வாங்குகிறோம் என்று சொன்னாலும், குடும்பங்களோடு வரும் மக்கள் சரி ஒருநாள் கூத்துதானே என்று நினைத்தும், குழந்தைகளின் வற்புறுத்தலுக்காகவும் நப்பாசை காரணமாகவும் உணவு மற்றும் விளையாட்டு வளாகத்தில் இப்படி பணத்தை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள்.
இவற்றையெல்லாம் மிகக் கொடுமையான விசயம் எதுவென்றால் வாகன நிறுத்துமிடத்தில் நடத்தப்படும் அநியாய பணம் பிடுங்கல்தான். சென்னையில் தற்போது இயங்கிவரும் அனைத்து மால்களிலும் விதவிதமான முறையில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறைந்த பட்ச கட்டணம் என்று ஒன்றே எந்த மாலிலும் கிடையாது. மணிக்கணக்கில் கணக்கிட்டு இந்த மால்கள் பணம் பிடுங்கிக் கொள்கின்றன. மெகா மாலில் திரைப்படம் பார்க்க இரு சக்கர வாகனத்தில் செல்லும் ஒருவர் மூன்று மணிநேர திரைப்படத்திற்கு 120ரூபாய் செலவிடுகிறார் என்றால், வாகன நிறுத்தத்திற்கு குறைந்த பட்சம் 80ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது.
ஒரு நாளில் குறைந்தபட்சம் ஆயிரம் வாகனங்கள் மால்களுக்குள்ளே செல்கிறதென்றால் குறைந்தபட்சம் 80ஆயிரம் ரூபாய், ஒரு மாதத்திற்கு 24இலட்சம் ரூபாய், ஒரு ஆண்டிற்கு 2கோடியே 88லட்சம் ரூபாய்  வசூலிக்கிறார்கள். இந்த கணக்கே நம் கண்ணைக் கட்டுகிறதா இல்லையா? இருசக்கர வாகனத்திற்கு வசூலாகும் தொகை இதுவென்றால் நான்கு சக்கர வாகனங்களின் கட்டண வசூல்வேட்டைப்பற்றி நாம் சொல்ல வேண்டியதேயில்லை.
இந்த மால்களில் உள்ள அனைத்து வாகன நிறுத்தங்களும் முறையான பராமரிப்பின்றி மிக மோசமான முறையிலேயே வைத்திருக்கிறார்கள். மேலும் அங்கு நிறுத்தப்படும் நமது வாகனங்களின் பாதுகாப்பிற்கு நிருவாகம் பொறுப்பேற்காது என்பதையும் அதிரடியாகவே கூறிவிடுகிறார்கள். இந்த வாகன நிறுத்தங்களில் ஏதாவது தீ தொடர்பான விபத்துகள் நேரிட்டாலோ அங்குள்ள அனைத்து வாகனங்களும் எரிந்து நாசமாக வேண்டியதுதான். உடனடியாக வாகனங்களை வெளியேற்றுவதற்கான எந்த வசதியும் அங்கு கிடையாது. இந்த லட்சணத்தில் நேரக்கணக்கீட்டில் பணத்தை மட்டும் பிடுங்கிக் கொள்கிறார்கள் மால்களின் நிருவாகத்தினர்.
இதையெல்லாம்தட்டிக்கேட்கவேண்டியதுவாடிக்கையாளரானநாம்சொகுசு, பொழுது போக்கு என்ற மேற்கத்திய நுகர்வின் காரணமாக வாய்மூடி மவுனிகளாக இருந்து விடுகிறோம். இதனால், அவர்களிடம் எதற்காக 10ரூபாய்க்கும்20ரூபாய்க்கும்சண்டைப்போடவேண்டும்என்றவீண்ஜம்பத்துடனும்,கொள்ளையடிப்பதைப்பற்றிஉணராமையாலும்,நம்மிடம்காசுஇருக்கிறதேஎன்கிறஅலட்சியத்தாலும் மால்கள்நடத்துபவர்கள் கொள்ளையடிப்பதைசட்டமாக்குகிறார்கள்.
பணம் இருப்பவர்கள்தானே இது போன்ற இடங்களுக்கு செல்லவேண்டும் பணம் இல்லாதவர்களை யார் போகச் சொன்னார்கள்? என்று நம்மிடையே உள்ள சில அதிமேதாவிகள் கேள்விகேட்கக் .கூடும். நியாயம்தான், ஆடம்பரங்களைக் காட்டி மக்களை மயக்கும் விதமாக ஆங்காங்கே விளம்பரங்களை செய்தால் யார்தான் அவற்றை பார்க்க வேண்டும் என்று எண்ணத்திற்கு ஆட்படாமல் இருப்பார்கள்.
இதற்கு அரசும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கமாட்டேன் என்கிறது. மால்களில் நடத்தப்படும் தியேட்டர்களில் இவ்வளவுதான் உட்சபட்சமாய் தொகை வாங்க வேண்டும் என்று சட்டம் இருக்கும் போது மால்களில் வாகன நிறுத்தம் மற்றும் உணவு, விளையாட்டு வளாகங்களில் நடைபெறும் கொள்ளைகளை தடுக்கும் படியான சட்டங்களை கொண்டு வர வேண்டுமா வேண்டாமா? எனப்துதான் சமூக ஆர்வலர்களின் கேள்வியாக இருக்கிறது.