பகாடியாக்களை
தேடி…..
மானுடவியல் துறையில் பயிலும்
மாணவர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பழங்குடியினரின் வாழ்க்கை முறைப் பற்றி களஆய்வு
செய்ய வேண்டும்.அது அந்தப் படிப்பிற்கு ஏதுவான விடயம் என்பதால் மானிடவியல்
துறையில் அந்த களஆய்வு முதன்மையான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் சென்னை பல்கலைக்கழகத்தின்
மானுடவியல் துறை மாணவர் என்ற வகையில் நானும் என்னுடன் பயிலும் மரியன் பிரசாத்,
அம்மு காயத்ரி, விபா ருக்மிணி, அசாங் ஆகியோர் ஏதாவது ஒரு பழங்குடியினரைப்
தேடிப்போக முடிவு செய்தோம்.
இதற்கு முன் இத்துறையில் பயின்ற
மாணவர்கள் பெரும்பாலும் தென்மாநிலங்களில் உள்ள பழங்குடியின மக்களையே இதுவரை
களஆய்விற்கு எடுத்துக் கொண்டுள்ளனர். அதனால் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பகாடியா
என்ற மக்களை சென்று பார்ப்போம் என்று நண்பன் மரியன் சொல்ல மற்றவர்கள் ஏற்றுக்
கொண்டோம். அதற்கான ஏற்பாடுகளை அவரே செய்யத் தொடங்கினார்.
எங்களின் துறைத்தலைவர்(பொ) முனைவர்
சுமதி அவர்கள் எங்களுக்கு பலமுறை எப்படி களஆய்வு செய்வது மக்களிடம் எப்படி
அணுகுவது, யாரார் என்ன தலைப்பில் ஆய்வு செய்வது என்பது உள்ளிட்ட பலவற்றை
அக்கறையோடு கற்றுக் கொடுத்தார்.
இறுதியாக காட்டுநிலம் என்ற பொருள்பட
விளங்கும் ஜார்கண்ட் மாநிலத்தின் பக்கூர் மாவட்டத்தில் உள்ள ராஜ்மகல் என்ற
மலைத்தொடரில் வசிக்கும் பகாடியா என்னும் பழங்குடியின மக்களின் வாழ்நிலையைப் பற்றி
அறிந்துகொள்ளும் எங்களது களப்பணி கிட்டத்தட்ட 20நாட்கள் மேற்கொள்வது என்ற
ஒப்புதலுடன் பயணத்திற்கு தயாரானோம்.
இந்த நாட்களில் என்னுடைய இதழ் பணி
முற்றிலும் தடைபடும் என்கிற நிலையில், இந்தப் பயணத்தை மேற்கொள்வது மிக அவசியமான
ஒன்றாகவே நான் கருதினேன். அதற்கான காரணம், வட மாநிலங்களுக்கு நான் மேற்கொள்ளும்
முதல் பயணம். அதுவுமில்லாமல் அந்த பயணம்கூட சுற்றுலா செல்வதுபோல் ஓரிரு நாள்கள்
என்றில்லாமல் 20நாட்கள் சம்பந்தப்பட்ட மக்களுடனேயே தங்கியிருந்து மேற்கொள்ளும்
களப்பணி, பல அனுபவங்களைப் பெற்றுத்தரும் என்பதுதான்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 21-ம் நாள்
இரவு சென்னையில் இருந்து ஹவுரா (கொல்கத்தா) செல்லும் ஹவுரா விரைவு தொடரியில்
எங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல் முறையாக வடஇந்தியா செல்லும்
காரணத்தால் சற்றே அவசரகதியில் முன்னேற்பாடுகள் இன்றியே சென்றேன்.சென்னை நடுவம்
தொடரி நிலையத்திற்கு எனக்கு முன்னமே வந்து காத்திருந்த நண்பர்களுடன் சென்று
எங்களுக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டோம். எங்களை வழியனுப்ப நண்பர்கள்
உதயகுமார், அருண் ஆகியோர் வந்திருந்தனர்.
சரியாக இரவு 11.50மணிக்கு நாங்கள்
இருந்த ஹவுரா விரைவு வண்டி கிளம்பியது.தென் மாநிலங்களில் தொடரியில் பயணம்
மேற்கொள்வதற்கும், வட பகுதியில் பயணம் மேற்கொள்வதற்கும் எத்துனை வேறுபாடு என்பதைப்
பற்றி நான் கேள்வி மட்டுமே பட்டிருக்கிறேன். அதை கண்கூடாக காணும் வாய்ப்பு
கிடைத்தது. சரியாக இருபத்தெட்டு மணிநேர பயணத்திற்குப் பிறகு 23ந் தேதி அதிகாலை
4.30மணிக்கு நாங்கள் ஹவுரா(கொல்கத்தா) சென்று சேர்ந்தோம்.
அங்கே இரண்டு மணிநேர ஓய்விற்குபின்
ஜார்கண்டில் உள்ள பக்கூர்(Pahur) நிலையத்திற்கு செல்லும் தொடரியைத் தேடி கண்டுபிடித்து
அமர்ந்து கொண்டோம். அந்த வண்டியிலும் எங்களுக்கான முன்பதிவை செய்திருந்ததால்
நாங்கள் அந்தந்த இடத்தில் அமர்ந்து கொண்டோம்.வண்டி கிளம்ப ஆரம்பித்த பின்னர்தான்
தெரிந்தது அது பயணிகள் வண்டி என்று. என்ஜினோடு சேர்த்து மொத்தமே அய்ந்து பெட்டிதான்
அந்தத் தொடரியில் இருந்தது. கிட்டத்தட்ட எட்டு மணிநேரம் பயணம் செய்தபின் நாங்கள்
இறங்கவேண்டிய பக்கூர் நிலையத்தில் எங்களை துப்பிவிட்டு அந்த தொடரி தனது பயணத்தைத்
தொடர்ந்தது. (அந்த இரண்டு தொடரிப் பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களைப் பின்னர்
கூறுகிறேன்.)
அந்த பக்கூர் நிலையத்தில் எங்களை
வரவேற்று அழைத்துச் செல்ல அந்நிலையத்திற்கு அருட் தந்தை பெரிய நாயகம் என்பவர்
வந்திருந்தார். சந்தேகமே பட வேண்டாம் அவர் தமிழர்தான்.நீண்ட காலமாக அப்பகுதி
மக்களுக்கு இறைப்பணி செய்ய அங்கேயே தங்கியிருக்கிறாராம். பக்கூர் நகரத்தை
அடுத்துள்ள தொடை (Torai) என்ற கிராமத்தில் CTC-யை
(CATECHISTS TRAINING CENTRE ) நிருவகித்து
வரும் அவர், எங்களை அவரது வாகனத்தில் அந்த மய்யத்திற்கு அழைத்துச் சென்றார். மய்யத்தில்
இருந்த மற்ற அருட் தந்தைகள் சாக்கோமற்றும் பிரான்சிஸ்
ஆகியோரை அறிமுகப்படுத்தினார். நாங்கள் சென்ற
நேரம் மாலை 4மணி என்றபோதும் எங்களுக்கு நல்ல உணவு அங்கே ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இவர்களில் பகாடியா மக்களிடம் அதிகம் நெருங்கிப்பழகி அவர்களைப் பற்றிய புத்தகம் ஒன்றை
ஆங்கிலத்தில் எழுதியவர் அருட் தந்தை சாக்கோ என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் பகாடியா மக்களை நாங்கள் எப்படி அணுக வேண்டும் அவர்களின்
வாழ்வு முறைகள் என்ன என்பது போன்ற பல தகவல்களை அன்றிரவு எங்களுக்கு எடுத்துக் கூறினார். பின்னர்
பயணக் களைப்பினால் நாங்கள் ஓய்வெடுத்தோம். அந்த இரவு சற்று குளிர்தான் என்றாலும் கதகதப்பான
கம்பளியின் உதவியால் சமாளித்துக் கொண்டேன். காலை உணவிற்குப் பிறகு பகாடியா மக்களின்
வாழ்விடத்திற்கு செல்ல வேண்டும் என்று துரிதப்படுத்தினார் சாக்கோ.நாங்கள் தங்கியிருந்த
பக்கூரில் இருந்து 40கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ராஜ்மகல் என்கிற மலைத்தொடரை நோக்கி
எங்களை அழைத்துச் சென்றார்.
முதலில் நாங்கள் சென்ற இடம் சத்யா என்ற கிராமம். அங்குதான் நாங்கள்
தங்கியிருந்து களஆய்வு செய்ய வேண்டும் என்பதை
தாமதமாகத்தான் தெரிந்து கொண்டேன். சத்யா என்கிற அந்த கிராமத்தில் பகாடியா சேவா சமிதி
கேந்திரா (Paharia Seva Samithi Kendira) என்கிற நிறுவனத்தின் இயக்குநர் அருட் தந்தை டியோனஸ் மற்றும் அங்கு செயல்பட்டுவரும்
பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட் தந்தை மரியனோஸ் மற்றும் சகோதரிகள் மேக்டலின், நீலமணி
ஆகியோருடன் அங்கு பணியாற்றும் சேவியர் உள்ளிட்டோர் எங்களை இன்முகத்துடன் வரவேற்றனர். அந்த
இன்முக வரவேற்பு விருந்தோம்பல் பாங்கு நாங்கள் அங்கு தங்கியிருந்த நாட்கள் முழுவதும்
நீடித்தது. அந்தளவு எங்களை நன்றாக கவனித்துக் கொண்டார்கள்.
எங்கள் அனைவரின் பரஸ்பர அறிமுகப் படலத்திற்குப் பிறகு அங்கு எங்களுக்கு
மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். உணவை பற்றி குறிப்பிடும் போது உள்ளபடியே மகிழ்ச்சி
ஏற்படுகிறது. காரணம் அங்கிருந்த நாள்வரை எனக்கு தமிழ்நாட்டின் முதன்மை உணவான சோறு கிடைத்ததுதான்.அதனால்
வெளிமாநிலத்தில் இருக்கும் உணர்வே ஏற்படவில்லை.
உணவிற்குப் பிறகு சாக்கோ விடைபெற்றுச் சென்றார். அதன்பிறகு டியோனஸ்,
மரியனோஸ் ஆகியோர் சத்யா கிராமத்தின் தன்மைகளைப் பற்றியும் அங்கு நடத்தப்பட்டு வரும்
பள்ளியின் பணிகளைப் பற்றியும் விளக்கினர். அன்றைக்கு சந்தை நாள் என்பதால் என்னையும்
மரியனையும் அழைத்துக் கொண்டு சென்றார் அருட்தந்தை டியோனஸ். நாங்கள் சாக்கோவுடன் வரும்
பொழுதே ஜார்கண்டின் சாலைகளின் அவலத்தையும் போக்குவரத்து சிரமங்களையும் பார்த்தோம் என்றாலும்,
இப்பொழுது நாங்கள் பார்க்கும் பொழுது மாநிலத்தில் உள்ள மக்கள் எத்தனை பெரிய சிரமப்
பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்தது.
அந்த அவலத்தை நேரில் கண்டதும் தமிழ்நாடு எத்தகைய முன்னேற்றத்தை கண்டிருக்கிறது என்று எண்ணிப்பார்க்கத் தூண்டியது.
ஜார்கண்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் அவலமே ஒட்டுமொத்த மாநிலமும் எப்படிபட்ட முன்னேற்றத்தை
அடைந்திருக்கிறது என்பதை காட்டுவதாக இருந்தது. குண்டு குழியுமான சாலைகளில் அந்த மக்கள்படும்
அவதிகள் கொஞ்ச நெஞ்சமல்ல. மருந்திற்குக் கூட அரசுப் பேருந்துகள் கிடையாது.மாற்றாக தனியார்
வாகனங்கள்தான்.
சிற்றுந்து, வேன், ஜீப் உள்ளிட்டவைகளில்தான் அப்பகுதி மக்கள்
தொங்கிக் கொண்டும் வண்டிகளின் மேல் அமர்ந்து கொண்டும் செல்கிறார்கள்.இந்த தொங்கலில்
ஆண்-பெண் வேறுபாடெல்லாம் கிடையாது.இதைப் பார்க்கிற பொழுது சென்னையில் மாநகரப் பேருந்துடன்
ஒப்பிட வேண்டியிருக்கிறது. சென்னையில் படிக்கும் மாணவர்கள் தங்களுடைய ஹீரோயிசத்தை காட்ட,
பேருந்தின் கூரைமீது ஏறி ஆட்டம் போடுவதும், படிகளில் தொங்குவதும் பாட்டுப்பாடுகிறோம்
என்கிற பெயரில் கத்தி கூச்சலிட்டு அட்டகாசம் செய்து பொதுமக்களுக்கு சிரமத்தைக் கொடுத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், ஜார்கண்டில் உள்ள மக்கள் வறுமையின் காரணமாக சிரமப்பட்டு
பயணம் மேற்கொள்கிறார்கள். கொடுமை என்னவென்றால் அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் தங்கள்
பயணத்திற்கு பயன்படுத்தும் வாகனங்களில் முதன்மையானது எதுவெனில் நடராஜா சர்வீஸ்தான். ஆம்,
கால்நடைப் பயணத்தைத்தான் அதிகமான மக்கள் மேற்கொள்கிறார்கள்.கால்நடையோடு கால்நடையாக
பெரும்பாலான மக்கள் பொதி சுமந்து செல்லும் காட்சி மனதை பிசைவதாக இருந்தது.
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டும் படம் பிடித்துக் கொண்டும்
சத்யாவிலிருந்து 20கிலோ மீட்டர் தள்ளியிருக்கிற கிரன்பூர் என்ற சிறுநகரத்தில் நடக்கும்
சந்தையை நாங்கள் அடைந்தோம். சந்தையில் இன்னும் பல ஆச்சரியங்கள் எங்களுக்காக காத்திருந்தது.
அவை……
-தொடரும்