எங்கள்
அண்ணலே
நாங்கள் இன்னும்
அப்படியேதான் இருக்கிறோம்…
மாற்றமுமில்லை
ஏற்றமுமில்லை…
நீ
எங்களுக்காய்
சமைத்த பாதையில்
பயணிக்க
என்றும்
துணிந்தோமில்லை…
தடைக்கற்களை
அப்பாதைகளில்
நிறைத்தது
நாங்களேதான்…
இன்னும்
தெளிவாய்
சொல்வதானால்
நீ
நிறுத்திச் சென்ற
பாதையிலிருந்து
பல தளங்கள்
நகர்ந்து சென்றுள்ளோம்…
முன்னோக்கியல்ல
பின்னோக்கித்தான்…
அடிமை
விலங்குடைக்க
அறிவாயுதம் தந்தாய்…
மகிழ்ச்சியோடு
மார்தட்டிச் சொல்கிறோம்
மறந்துங்கூட
நாங்கள் அதை
பயன்படுத்துவதில்லை…
அறிவுக்குச்
சேதாரம் வந்துவிடும்
என்ற
அச்சம்தான் காரணம்….
ஆம்…
உன்னறிவையும்
உன்னுழைப்பையும்
பின்பற்றினோமில்லை…
உன் துதிபாடுவதிலேதான்
எங்கள் காலம்
கழிகிறது….
நாங்கள்
ஒன்றுபட்டு
நின்றதாய்
நினைவில்லை…
உதிரியாய் நின்றே
ஒலிப்பதால்தான்
எவருக்கும்
கேட்பதில்லை
எங்களின்
உரிமைக்குரல்…
எது ஒழிய ‘
பாடுபட்டாயோ
அதிலேதான்
நாங்கள்
ஒளிந்து
கொண்டிருக்கிறோம்…
ஜாதிப் பெருமை பேசும்
பெருநோய்
எங்களையும்
தாக்கிவிட்டது…
இன
இழிவை ஒழிக்க
இந்து மதத்தை
விட்டொழி என்றாய்…
விட்டொழித்தோம்…
மதத்தையல்ல
உன்
மகத்துவத்தை…
இப்பொழுதெல்லாம்
நாங்கள்
கூச்சப்படுவதேயில்லை…
ஆம்
எங்களோடு
உன் படத்திற்கும்
சிலைக்கும்
மறக்காமல்
இடுகிறோமே
மதக்குறியீடை
உனை
போற்றுகிறோம்…
எங்களின்
ஒதுக்கீட்டிற்கு
பங்கம்
வரும்போதெல்லாம்…
உன் புகழும்
பாடுகிறோம்…
எங்களைவிட
எங்கள் எதிரிக்கு
உன் அறிவின்
தாக்கமுள்ளதால்…
நிச்சயமாய்
கூறுகிறேன்
நாங்கள் மட்டுமல்ல
எங்களின்
பலதலைமுறைகளும்
உன் பெயரை மட்டுமே
உச்சரித்து வாழும்…
உன் கொள்கையைத்தான்
நாங்கள் என்றோ
ஆழக்குழி தோண்டி
புதைத்துவிட்டோமே…
நாங்கள்
யானையைப்
போன்றவர்கள்..
எங்கள் பலத்தை
நாங்கள்
உணர்ந்ததேயில்லை…
அதனால்தான்
எவருக்கேனும்
அடிமையாய்
இருப்பதை
பெருமையாய்
எண்ணுகிறோம்…
எவர் எங்களை
தாழ்த்தினாரோ
அவர்களையே
அரியணையேற்றி
அழகு பார்க்கிறோம்…
நாங்கள்
ஆளப்படுவதையும்...,
கொல்லப்படுவதையும்...,
ஆசைதீர கண்டு
இன்புறுகிறோம்…
அவர்களின்
வளர்ச்சிகாய்
பாடுபடும்
நாங்கள்
காத்திருக்கிறோம்…
எப்போதேனும்
மானியங்களாய்
ஒதுக்கீடுகளாய்
எலும்புத் துண்டுகள்
வந்துவிழும்
என்ற நம்பிக்கையுடன்…
நாங்கள்
நெஞ்சம் நிமிர்த்தி
கூறுகிறோம்….
மனித நேயத்தின்
குறியீடான
இந்துத்துவம்(?)
உன்னை
சுவீகரிக்க
எடுக்கும்
முயற்சியில்
எங்களின்
பங்கே
முதன்மையானது….
அறிவுலக ஆசானே
உன் நினைவு நாளிலும்
நீ பிறந்த நாளிலும்
எப்பொழுதும்
சூளுரைப்பதுபோல்
இப்பொழுதும்
ஆணையிட்டுக் கூறுகிறோம்…
எங்களின்
வாழ்வுரிமைக்கும்
விடுதலைக்குமாய்
என்றைக்கும்
போராடுவதாய்…
சூளுரைப்பதோடு
நிறுத்திக்கொள்கிறோம்…
-சகா
(06/12/2014 டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் எழுதியது...)