சனி, 20 டிசம்பர், 2014

எவருக்கேனும் அடிமையாய்...


எங்கள்
அண்ணலே
நாங்கள் இன்னும்
அப்படியேதான் இருக்கிறோம்…
மாற்றமுமில்லை
ஏற்றமுமில்லை…

நீ
எங்களுக்காய்
சமைத்த பாதையில்
பயணிக்க
என்றும்
துணிந்தோமில்லை…
தடைக்கற்களை
அப்பாதைகளில்
நிறைத்தது
நாங்களேதான்…

இன்னும்
தெளிவாய்
சொல்வதானால்
நீ
நிறுத்திச் சென்ற
பாதையிலிருந்து
பல தளங்கள்
நகர்ந்து சென்றுள்ளோம்…
முன்னோக்கியல்ல
பின்னோக்கித்தான்…

அடிமை
விலங்குடைக்க
அறிவாயுதம் தந்தாய்…
மகிழ்ச்சியோடு
மார்தட்டிச் சொல்கிறோம்
மறந்துங்கூட
நாங்கள் அதை 
பயன்படுத்துவதில்லை…
அறிவுக்குச்
சேதாரம் வந்துவிடும்
என்ற
அச்சம்தான் காரணம்….

ஆம்…
உன்னறிவையும்
உன்னுழைப்பையும்
பின்பற்றினோமில்லை…
உன் துதிபாடுவதிலேதான்
எங்கள் காலம்
கழிகிறது….

நாங்கள்
ஒன்றுபட்டு
நின்றதாய்
நினைவில்லை…
உதிரியாய் நின்றே
ஒலிப்பதால்தான்
எவருக்கும்
கேட்பதில்லை
எங்களின்
உரிமைக்குரல்…

எது ஒழிய ‘
பாடுபட்டாயோ
அதிலேதான்
நாங்கள்
ஒளிந்து
கொண்டிருக்கிறோம்…
ஜாதிப் பெருமை பேசும்
பெருநோய்
எங்களையும்
தாக்கிவிட்டது…

இன
இழிவை ஒழிக்க
இந்து மதத்தை
விட்டொழி என்றாய்…
விட்டொழித்தோம்…
மதத்தையல்ல
உன்
மகத்துவத்தை…

இப்பொழுதெல்லாம்
நாங்கள்
கூச்சப்படுவதேயில்லை…
ஆம்
எங்களோடு
உன் படத்திற்கும்
சிலைக்கும்
மறக்காமல்
இடுகிறோமே
மதக்குறியீடை



உனை 
போற்றுகிறோம்…
எங்களின் 
ஒதுக்கீட்டிற்கு
பங்கம் 
வரும்போதெல்லாம்…

உன் புகழும் 
பாடுகிறோம்…
எங்களைவிட
எங்கள் எதிரிக்கு
உன் அறிவின்
தாக்கமுள்ளதால்…

நிச்சயமாய்
கூறுகிறேன்
நாங்கள் மட்டுமல்ல
எங்களின்
பலதலைமுறைகளும்
உன் பெயரை மட்டுமே
உச்சரித்து வாழும்…
உன் கொள்கையைத்தான்
நாங்கள் என்றோ
ஆழக்குழி தோண்டி
புதைத்துவிட்டோமே…

நாங்கள்
யானையைப்
போன்றவர்கள்..
எங்கள் பலத்தை
நாங்கள்
உணர்ந்ததேயில்லை…

அதனால்தான்
எவருக்கேனும்
அடிமையாய்
இருப்பதை
பெருமையாய்
எண்ணுகிறோம்…

எவர் எங்களை
தாழ்த்தினாரோ
அவர்களையே
அரியணையேற்றி
அழகு பார்க்கிறோம்…
நாங்கள்
ஆளப்படுவதையும்...,
கொல்லப்படுவதையும்...,
ஆசைதீர கண்டு
இன்புறுகிறோம்…

அவர்களின்
வளர்ச்சிகாய்
பாடுபடும்
நாங்கள்
காத்திருக்கிறோம்…
எப்போதேனும்
மானியங்களாய்
ஒதுக்கீடுகளாய்
எலும்புத் துண்டுகள்
வந்துவிழும்
என்ற நம்பிக்கையுடன்…


நாங்கள்
நெஞ்சம் நிமிர்த்தி
கூறுகிறோம்….
மனித நேயத்தின்
குறியீடான
இந்துத்துவம்(?)
உன்னை
சுவீகரிக்க
எடுக்கும்
முயற்சியில்
எங்களின்
பங்கே
முதன்மையானது….

அறிவுலக ஆசானே
உன் நினைவு  நாளிலும்
நீ பிறந்த நாளிலும்
எப்பொழுதும்
சூளுரைப்பதுபோல்
இப்பொழுதும்
ஆணையிட்டுக் கூறுகிறோம்…
எங்களின்
வாழ்வுரிமைக்கும்
விடுதலைக்குமாய்
என்றைக்கும்
போராடுவதாய்…
சூளுரைப்பதோடு
நிறுத்திக்கொள்கிறோம்…

-சகா

(06/12/2014 டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் எழுதியது...)

குயில்பாட்டு....

குயில்பாட்டு நீயும் கேட்பீர்...
குயிலுக்கு ஜாதியுண்டா...?
மயிலாட்டம் நீயும் பார்ப்பீர்...
மயிலுக்கு ஜாதியுண்டா...?
புலிகளும் தன்னினத்தை 
தாழ்த்துவதுண்டா...?
படித்தாலும் அறிவுமற்ற
தெளியா மனிதா....
(குயில்பாட்டு


நீர்வாழும் ஆமைகளுக்கு
ஜாதியின் சங்கமுண்டா....?....ஆ.....
மதங்கொள்ளும் யானைகளுக்கு
ஜாதியின் சண்டையுண்டா....?...ஆ...
சேற்றுக்குள் வாழும் பன்றிப்போலே....
ஜாதிமுலாம் பூசிக்கொள்வாய் வீணே.....
தீண்டாமை மட்டுமிங்கே
தீராத நோயாய் வாழுதே.....
(குயில்பாட்டு

கிறித்துவர்கள் நிறைந்த நாட்டில்
ஜாதியின் பேதமுண்டா....?....ஆ....
முகமதியர் வாழும் நாட்டில்
ஜாதியின் வாசமுண்டா...?.....ஆ....
எல்லோரும் இந்துயென்று இங்கே
ஏற்றத்தாழ்வு சொல்லிடுவான் வீணே...?
தீராத ஜாதி நோயால்
தீயாலே தேசம் வேகுதே...
(குயில்பாட்டு

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

கொம்பு முளைத்த கடவுள்

கொம்பு முளைத்த கடவுள் நீயோ
பசுவே மாடே…. – காவி
காலிகளின் கொள்கை நீயோ
பசுவே மாடே….
மதவெறியைத் தூண்டிவிட
பசுவே மாடே…. – காஞ்சி
மடத்திலேயும் உன்னை வளர்ப்பான்
எருமை மாடே….
                  (கொம்பு

பசுவதைக்குத் தடுப்புச் சட்டம்
கேட்டான் மாடே… - கேட்டவன்
காலிலேயே தோல் செருப்பாய்
நீதான் மாடே…
புனிதமென்றே உன்னைச் சொல்வான்
காவி மாடே… - உனக்கு
புல் புடுங்கி போட்டதில்லை
பார்ப்பன மாடே…
                  (கொம்பு


மாட்டுச் சாணி சாமியென்பான்
எருமை மாடே… - அதையும்
மண்டியிட்டு வணங்கி நிற்பான்
அடிமை மாடே…
மூத்திரத்தை கோமியமென்பான்
பூ நூல் மாடே… - குடித்து
மோட்சத்தை வேண்டி நிற்பான்
முட்டாள் மாடே…

                  (கொம்பு

பெண்ணே நீயும் சாதிக்க வேணுமடி

சாதிக்கும் காலமடி
பெண்ணே நீயும்
சாதிக்க வேணுமடி – அழகு
சாதனம் பூசி நின்றிடும்
சாது பொம்மையல்ல நீயடி – நீயிங்கு
பொம்மையல்ல நீயடி
       (சாதிக்கும்


கன்னியரை வதைக்கும்
கயவரைக் கண்டால்
கண்டதுண்டமாக்கடி – பெண்ணே நீயும்
கண்டதுண்டமாக்கடி
பேதையன்று உன்னை
கோழையென்று சொன்னால்
பேடித்தலாகாதடி – பெண்ணே நீயும்
பேடித்தலாகாதடி
                  (சாதிக்கும்
அச்சமட நாணம்
என்றுரைத்து உன்னை
அடக்கிட எண்ணிடுவார் – பெண்ணே உன்னை
தாழ்த்திட சொல்லிடுவார்
பெரியாரின் வழியில்
அறிவினைக் கொண்டால்
ஆண்டிட வந்திடலாம் – உலகை நீ
ஆண்டிட வந்திடலாம்
                  (சாதிக்கும்

சமையலறையில் வாழும்
அடிமைகள் என்றே
சமைத்திட சொல்லிடுவார் – பெண்ணே உன்னை
சதியாலே வீழ்த்திடுவார்
அறிவியல் இன்று
அரியனை ஏறி
ஆளவும் செய்யுதடி – அதில் நாம்
சாதனை செய்வோமடி
                    (சாதிக்கும்