வியாழன், 12 பிப்ரவரி, 2015

ஏனடி செல்லம்...?

பூமிதான் சாமியென்றாயே
என் தங்கமே தங்கம் - அது மேல
மலஜலம் கழிக்கிறியே
ஏனடி செல்லம்...?
சாணிய புள்ளையாராக்கினியே
என் தங்கமே தங்கம் - காலில் மிதிச்சா
முகத்தச் சுழிக்கிறியே
ஏனடி செல்லம்...?
(பூமிதான்


யானைதான் கணபதியுருவமா
நீ வணங்கிவிட்டு
மதம்பிடிச்சா மிரண்டு ஓடுறியே
ஏனடி தங்கம்...?
எருமைதான் எமனின் வாகனமா
நீ கண்டுகிட்ட
சோம்பேறின்னு அதையும் வைய்யிறியே
ஏனடி செல்லம்...?
பன்றிதான் விஷ்ணுவின் அவதாரமா
நீ எழுதிவெச்ச
மலத்தையும் தின்பத ரசிக்கிறியே
ஏனடி தங்கம்...?
புலிகூட அய்யப்பன் வாகனமா
நீ சொல்லிகிட்ட
பார்த்தாலே பயந்து சாகுறியே
ஏனடி செல்லம்...?
(பூமிதான்


கொண்ட சேவல் முருகன் அம்சமா
நீயும் சொல்லிகிட்டு
சிக்கனென்ற பேரில் திங்கிறியே
ஏனடி தங்கம்...?
சுண்டெலிதான் பிள்ளையார் வாகனமா
நீயும் நம்பிகிட்ட
அரிசி பருப்பத் தின்னா கொல்லுறியே
ஏனடி செல்லம்
சனிபகவான் வாகனம் காக்கையா
நீயும் காட்டிகிட்டு
வடகத்த தின்னா விரட்டுறியே
ஏனடி தங்கம்...?
நச்சுப் பாம்பு நாகராஜனாம்
நீயும் கும்புட்டுவிட்டு
வீட்டுக்குள் வந்தா அடிக்கிறியே
ஏனடி செல்லம்....?
(பூமிதான்



திங்கள், 2 பிப்ரவரி, 2015

சிந்திச்சுப் பாரேன் கண்ணம்மா



கோயிலுக்குப் போறபுள்ள... நீ
அறியாத சேதி கேளு...
நீ வணங்கும் சாமியெல்லாம்
கற்சிலைதான் காக்காதம்மா...
(கோயிலுக்கு


நம்மூரு ஜனங்களெல்லாம்
தெருவோரம் கெடக்கறப்போ
நட்டுவச்ச கல்லுக்கு
கோடி கோயில் எதுக்கம்மா....?
ஒரு வேளை உணவுக்குத்தான்
ஏங்கும் கூட்டம் கோடியம்மா....
கோடிய கொட்டி நடத்தும்
குடமுழக்கு எதுக்கம்மா....?
சிந்திச்சுப் பாரேன் கண்ணம்மா.... - நீயும்
சிந்திச்சுப் பாரேன் கண்ணம்மா...
(கோயிலுக்கு


மானத்த மறைக்கத் துணி
இல்லாத மனுசனிருக்க
மண்ணான சாமியெல்லாம்
பட்டாட கட்டுதம்மா....ஆ...
நாட்டுக்குள் வறுமையம்மா
நாளும் அது ஏறுதம்மா
நடுத்தெருவில் ஆண்டவனுக்கு
தங்கத்தேர் ஓடுதம்மா...ஆ...
சிந்திச்சுப் பாரேன் கண்ணம்மா.... - நீயும்
சிந்திச்சுப் பாரேன் கண்ணம்மா....
(கோயிலுக்கு



-சகா