தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை பெருநகரத்தில் தற்பொழுது மிகப்பெரிய வருமானம் கொழிக்கும் தொழில் எதுவென்றால் வீடுகளை வாடகைக்கு விடுவதுதான். அந்தளவுக்கு அள்ளஅள்ளப் பணம் என்பதுபோல் வளங்கொழித்துக் கொண்டிருக்கிறது வீடு வாடகைக்கு விடும் தொழில். வருமானம் என்றால் சாதாரணமாக நினைத்துக் கொள்ள வேண்டாம். வருமான வரி கட்டாமலேயே கொள்ளை லாபம் ஈட்டும் மாபெரும் தொழிலாக வளர்ந்து வருகிறது.
வாழவழி தேடி சென்னைக்கு இடம் பெயரும் ஏழை எளிய, நடுத்தர மக்கள் சென்னையில் குடியிருக்க முடியாத சூழல்தான் தற்பொழுது உருவாகி வருகிறது. அதற்குக் காரணம் விலைவாசி உயர்வு என்பது ஒருபக்கம் என்றால் முக்கியமான பிரச்சனை என்பது குடியிருக்கும் வீடுகளின் வாடகை நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டிருப்பதுதான்.
கடந்த சில ஆண்டுகளாகவே வீடுகளின் வாடகை இரண்டு மூன்று மடங்கு அதிகரித்து வருகிறது. ஒரு ஆண்டுக்கு முன்னால் 1000 ரூபாய் இருந்த சாதாரண வீடுகளின் வாடகை தற்பொழுது 3000, 4000 என்று அதிமாகி விட்டது.
மேற்குறிப்பிட்ட வாடகை ஒரு படுக்கை அறை (Single Bed Room House) கொண்ட வீட்டிற்குத்தான். இரண்டு படுக்கை அறை, மூன்று படுக்கை அறை என்றால் இன்னும் பல ஆயிரங்கள் கூடுதலாகிறது. இதைவிட தனி வீட்டின் வாடகையை கேட்டால் பலருக்கு பேதியாகவிடும். அந்தளவுக்கு வரைமுறை இல்லாமல் வாடகையை தாறுமாறாக உயர்த்திக் கொண்டிருக்கின்றனர் வீட்டின் உரிமையாளர்கள்.
வீட்டின் வாடகையை அதிகமாக்கியதோடு மட்டுமல்லாமல் மின்சாரக் கட்டணம் என்ற பெயரில் நடக்கும் கொள்ளை அளவிட முடியாததாக இருக்கிறது. ஒருசில வீட்டின் உரிமையாளர்கள் பல குடியிருப்புகளைக் கட்டி அவற்றை வாடகைக்கு விடுகிறார்கள். அத்தனைக் குடியிருப்புக்கும் முறையாக மின் இணைப்பை பெறுவதில்லை.
மாறாக ஒரே ஒரு வீட்டுக்கு மட்டும் மின் இணைப்பை வாங்கிக் கொண்டு அதையே மற்ற வீடுகளுக்கும் பகிர்ந்தளிக்கின்றனர். இதனால் அதிகமாகும் மின் கட்டணத்தை குடியிருப்பவர்கள் தலையிலேயே சுமத்தி விடுகின்றனர். 1 யூனிட் மின்சாரத்திற்கு மின்சார வாரியம் விதிக்கும் கட்டணம் 2 ரூபாய் என்றால், வீட்டு உரிமையாளர்கள் 4 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை என்று குடியிருப்போர்களிடம் கொள்ளையடிக்கின்றனர். போதாதற்கு தண்ணீருக்கு கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவுக்கு என்றும் பலவிதங்களில் குடியிருப்போர்களை சுரண்டிப் பிழைக்கிறார்கள் இந்த வீட்டின் உரிமையாளர்கள்.
இப்படி வீடுகளை வாடகைக்கு விடுவதன் மூலமாக பலர் மாதந்தோறும் லட்சக் கணக்கில் வருமானத்தை பெறுகிறார்கள். அப்படி வரக்கூடிய வருமானத்திற்கு முறையாக வருமான வரிகட்டவேண்டும். வணிக வளாகம் கட்டி வாடகைக்கு விடுபவர்கள் பலர் வருமான வரியை செலுத்துகிறார்கள். ஆனால் பல வீட்டின் உரிமையாளர்கள் முறையாக வரியைக் கட்டாமல் அரசாங்கத்தை ஏமாற்றி வருகிறார்கள்.
இதைப்பற்றி வருமான வரித்துறையின் சென்னை மண்டல அதிகாரி ஒருவர் கருத்தரங்கம் ஒன்றில், ‘வீடுகளை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பவர்கள் யாரும் வருமான வரி செலுத்துவதில்லை. அப்படி வரி ஏய்பபவர்கள் முறையாக வரியை செலுத்துவார்களேயானல், நாட்டின் பொது வருமானம் அதிகரிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகமயமாக்கல் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்கிற கொள்கை உருவான பிறகு தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை ‘சிங்காரச் சென்னை’ என்கிற அறிவிப்போடு தமிழ்நாடு அரசு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது என்னவோ உண்மைதான். உயர்ந்த கட்டிடங்கள், பிரமாண்டமான உயர்மட்ட பாலங்கள் அழகியப் பூங்காக்கள் என அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகரத்தின் இந்த அதிவேக வளர்ச்சிதான் தமிழ்நாட்டின் அடித்தட்டு மக்களை ஓடஓட விரட்டுவதாக இருக்கிறது.
இந்தியாவில் உருவாகியிருக்கும் பொருளாதாரச் சிக்கல், இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம்,
குடியிருப்புகளின் அதிகரிக்கும் வாடகை போன்ற பிரச்சனைகள் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் நடுத்தர மக்களுக்கு வேண்டுமானால் பெரிய பிரச்சனையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாளொன்றுக்கு 50 ரூபாய் கூலிகூட இல்லாமல் வறுமையில் வாடும் பெரும்பான்மை மக்களின் நிலை என்னவாகும் என்பதே நமது கேள்வி.
சென்னையல் குடியிருப்புகளின் வாடகை பெருமளவு கூடுதலாவதற்கு காரணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் அடகுகடை நடத்தி கோடி கோடியாய் சுருட்டிவரும் மார்வாடி, குஜராத்தி போன்றவர்களின் படையெடுப்பும் இந்த பன்னாட்டு கம்பெனிகளில் தற்போது பெருகிவரும் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் அதிகப்படியான ஊதியமும்தான் காரணம். சென்னைக்கு வெளிமாநிலத்தில் இருந்து கொத்து கொத்தாய் குடிபெயரும் இளைஞர்கள் 4 பேர், 5 பேர் கூட்டாக சேர்ந்து 2 ஆயிரம் ரூபாய் வாடகை மதிப்பு கொண்ட வீட்டை 5 ஆயிரம் என்று கொடுத்து குடியேறுகிறார்கள். மென்பொருள் நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரியும் இவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயில் இருந்து லட்சக்கணக்கில் ஊதியம் கிடைப்பதால், வாடகையைப் பற்றி கவலைப்படுவதே இல்லை.
அவர்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறையற்றத் தன்மையும்தான் இப்படி குடியிருப்புகளின் வாடகைகள் அதிகமாகி வருவதற்கு மிகமுக்கியமான காரணமாக இருக்கிறது. இப்படி வரைமுறை இல்லாமல் வீட்டு வாடகை ஏறிவருவதை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்பது தெரியவில்லை. இதனால் ஏகக் கொண்டாட்டத்தில் திளைக்கும் வீட்டு உரிமையாளர்கள் வரி ஏய்ப்பை செய்துவருகிறார்கள்.
இவர்களை இனம்கண்டு சட்டப்படி நடவடிக்கையை மேற்கொள்வதோடு வீட்டு வாடகைகளை முறைப்படுத்த இன்றைய ஆளும் அரசுகள் முன்வரும் என்றால் நாட்டிற்கும் நல்லது குடிமக்களுக்கும் நல்லது.