திங்கள், 19 நவம்பர், 2018

நாங்கள் வேண்டுவது உரிமைகளே...!

 -திருநங்கைகளுடன் ஒரு கலந்துரையாடல்

அன்மையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவுக்குப் புதிய விளக்கம் அளித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ‘மாற்றுப் பாலினத்தவர் மற்றும் பால் புதுமையர்’ (எல்ஜிபிடிகியூ) சமூகத்துக்கு மட்டுமல்லாமல், நமது ஜனநாயகத்துக்கும் புதிய வழியைக் காட்டியிருக்கிறது. மாற்றுப் பாலினரிடையே மகிழ்ச்சியை பெற்றிருக்கும் அந்த தீர்ப்போடு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட ‘திருநங்கைகள் மசோதா’ குறித்தும் திருநங்கைகளுடன் ஒரு கலந்துரையாடலை நடத்தலாம் என்று முடிவு செய்ததோம். அதனால் சென்னையில் இயங்கிவரும் ‘திருநங்கைகள் உரிமைச் சங்க’த்தின் தலைவர் ஜீவா மற்றும் திருநங்கைகள் மானு, சந்தனா, மோனி, நிர்மலா ஆகியோருடன் கலந்துரையாடினோம். திருநங்கைகள் போன்ற மாற்றுப் பாலினத்தவர் அனுபவிக்கும் வேதனைகள், வலிகள் என வழக்கமான உரையாடலாக இல்லாமல் அவர்கள் பொது சமூகத்திடமும், அரசாங்கத்திடம் கேட்பது என்ன? அவர்களுக்கான உரிமைகள் பற்றி அவர்கள் சொல்ல விரும்புவது என்ன? போன்ற விரிவான தளத்திற்குள் உரையாடலை கொண்டு சென்றோம். 
கேள்வி : இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
மானு : LGBT மக்களைப் பொறுத்தவரை இது மகிழ்ச்சியான தீர்ப்பு. சமூகத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள பயந்து ஒதுங்கியிருந்தவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது. 
ஜீவா : உச்ச நீதிமன்றம் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவை முழுமையாக நீக்கவில்லை. மாறாக நிறுத்தி வைத்துள்ளது. முன்னர் இந்த சட்டத்தின் மூலம் எங்கள் மக்களை கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வந்தது. அப்படி இனி செய்ய முடியாது. திருநங்கைகள் தான் தேர்ந்தெடுத்த ஆணை திருமணம் செய்வதில் இருந்த தடை தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது. இனி இந்த சட்டத்தைச் சொல்லி எங்களை மிரட்டவோ கைது செய்யவோ முடியாது. ஏனெனில் ஏற்கனவே 2014 ஏப்ரலில் உச்ச நீதிமன்றம் எங்களை மூன்றாம் பாலினமாக சட்டபூர்வ அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. ஆக எங்களுக்கு இது மகிழ்ச்சியான தீர்ப்புதான்.  
  கேள்வி : நாடாளுமன்றத்தில் திருநங்கைகள் தொடர்பான மசோதா கொண்டுவரப்பட்டது.  அம்மசோதாவில் உள்ள சாதக பாதகங்கள் என்னென்ன?
மானு : 2012ம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கின் விளைவாக 2014ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி உச்ச நீதிமன்றம் மூன்றாம் பாலினம் என்கிற அங்கீகாரம் கொடுத்தது. மேலும் எங்களுக்கான உரிமைகள் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆறு மாத காலத்திற்குள் இதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தீர்ப்பு வெளியாகி நான்கு ஆண்டுகளாகியும் இன்னும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இப்போதிருக்கும் பா.ஜ.க அரசு திருநங்கைகளுக்காக மசோதா ஒன்றை பிறப்பித்தது. ஆனால் அது முற்றிலும் தவறான ஒரு மசோதா. பாலின அடையாளம், வாழ்வாதார உரிமை என அனைத்துமே சரியான புரிதலின்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதை எதிர்த்து போராட்டங்களும் நடத்தினோம். எங்களின் தேவை என்பது இடஒதுக்கீடு தான். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு. போதுமான விழிப்புணர்வும், இடஒதுக்கீடும் இல்லாமல் எங்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு வாய்ப்பேயில்லை.
ஜீவா : இப்போதிருக்கும் பா.ஜ.க அரசு என்ன செய்ததென்றால், திருநங்கைகளை பற்றின சரியான புரிதலே இல்லாமல் சட்டம் இயற்றியது. யார் திருநங்கை என்பதிலேயே சரியான வரையறை இல்லை. மேலும் திருநங்கைகளின் வாழ்வாதார தொழிலே கடை கேட்பு தான். அதை செய்யக் கூடாது என்கிறது இந்த அரசு. ஆனால் மாற்று திட்டமும் குறிப்பிடவில்லை. இருக்கிற தொழிலையும் செய்யக் கூடாது, மாற்று தொழிலும் இல்லை என்றால் நாங்கள் என்ன செய்வது. இதை எதிர்த்து தான் தமிழகத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளும் வள்ளுவர் கோட்டத்தில் இணைந்து போராட்டம் நடத்தினோம். திருச்சி சிவா ஒரு தனி நபர் மசோதாவை கொண்டு வந்தார். அதில் எங்களைப் பற்றிய தெளிவான வரையறையும் எங்களுக்கு தேவையான திட்டங்களும் இருந்தது. நாங்கள் பெற்றோரோடு இருக்க வேண்டும், கல்வி வசதி, இட ஒதுக்கீடு என அனைத்து சிறப்பம்சங்களும் அதில் இருந்தது. ஆனால் அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பா.ஜ.க அரசின் சட்டத்தால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை.
ஸ்டெல்லா : இந்த மசோதா குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை. மருத்துவமனைகளில் எங்களுக்கு எப்படி மருத்துவம் பார்ப்பது என்று மருத்துவர்களுக்கே தெரியவில்லை. எங்களை ஒதுக்கும் நிலை இன்றும் தொடர்கிறது. திருநங்கைகள் குறித்த அடிப்படை புரிதல் அவசியம். எங்களுக்கும் மருத்துவ காப்பீடு போன்ற வசதிகள் வேண்டும்.
சந்தனா : இப்போதிருக்கும் சூழ்நிலையில் போதிய பாதுகாப்பற்ற இடங்களில் தான் வாழ்கிறோம். அதிலும் நாங்கள் திருநங்கைகள் என்பதால் கூடுதல் வாடகை பெறப்படுகிறது. இந்த நிலையில் பொருளாதாரத்திற்கு நாங்கள் என்ன செய்வோம்? பிச்சை எடுப்பதும், பாலியல் தொழிலையும் தவிர வேறு வழி இல்லையே !
கேள்வி : திருநங்கைகள் பற்றிய புரிதல் இல்லை என்கிறீர்கள், திருநங்கைகள் பற்றிய சரியான வரையறை இல்லை என்கிறீர்கள். யார் திருநங்கை?
மோனி : அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் தான் திருநங்கை. அறுவை சிகிச்சை செய்யாமல், பெண்ணாக உணர்ந்த நிலையில் இருப்பது தொடக்க நிலை. அறுவை சிகிச்சை செய்யாதவர்கள் திருநங்கைகள் இல்லை என ஏன் சொல்கிறேன் என்றால், அறுவை சிகிச்சை செய்து கொள்ளாதவர்கள், ஒரு கட்டத்திற்கு பிறகு தங்கள் அடையாளத்தை மாற்றிக் கொண்டு வேறு வேலைக்கு சென்றுவிட முடியும். ஆனால் எங்களால் அப்படி முடியாது. நான் மூன்று அறுவை சிகிச்சைகள் செய்திருக்கிறேன். என்னால் கல் உடைக்கவோ, மூட்டைத் தூக்கவோ இயலாது.
ஜீவா : திருநங்கைகள் பற்றி தவறான வரையறை எவ்வாறு வந்ததென்றால், தில்லியில் உள்ள திருநங்கைகள் அனைவரும் சமூகநீதி அமைச்சகத்திடம் சென்று திருநங்கைகள் பற்றிய வரையறையை தருகிறார்கள். திருநங்கைகள் நல வாரியம் முதன்முதலில் தமிழகத்தில் தான் உருவானது. தமிழகம் தான் முதன்முதலில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு தந்தது. ஆனால் பிரச்சினை என்னவெனில் இங்கிருந்து தில்லி சென்று எங்களின் அடையாளங்களையும் உரிமைகளையும் பற்றி பேசுவதில் உள்ள மொழி சிக்கல் தான். 
கேள்வி : இதற்கு தமிழக அரசு மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?
ஜீவா : நான் வாரிய உறுப்பினராக இருக்கும் பொழுது, அமைச்சர் "உங்கள் மக்களுக்கு என்னென்ன தேவை?" என்று எங்களை கேட்பார். நாங்கள் மொத்தம் எட்டு உறுப்பினர்கள்.ஒவ்வொருவரும் ஆறு மாவட்டங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டோம். அதன் அடிப்படையில் எங்களின் பிரச்சினைகளை அமைச்சரிடம் முன்வைப்போம். அந்தந்த துறை அதிகாரிகளிடம் அது தொடர்பான உத்தரவுகளை அமைச்சர் கொடுப்பார். அது எங்கள் உரிமைகளை பெறுவதற்கான வாய்ப்பாக இருந்தது. திருச்சி சிவா, எங்களுக்கு குடும்ப அட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார். அதனால் தான் இன்று அனைத்து திருநங்கைகளுக்கும் குடும்ப அட்டை கிடைத்துள்ளது. திருநங்கைகள் நல வாரியம் மூலமாகவும் பல உதவிகள் கிடைத்தன. 
கேள்வி : தற்பொழுது திருநங்கைகளுக்குப் போராடும் குணம் குறைந்து விட்டதா?
மானு : போராடித்தான் இத்தனை உரிமைகளையும் பெற்றோம். எந்தவொன்றும் எங்களுக்கு எளிமையாக கிடைக்கவில்லை.
ஜீவா : பிரித்திகா யாசினி கூட தேர்வெழுதியதும் காவல்துறையில் பணிவாய்ப்பு கிடைக்கவில்லை. திருநங்கை என்பதற்காக தொடக்கத்தில் அவர் நிராகரிக்கப்பட்டார். பின் நீதிமன்றத்தை அணுகி, நீதிமன்ற உத்தரவின் பேரில் தான் அவர் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார். ஆதலால் போராட்டம் இல்லாமல் எங்களுக்கு எதுவும் கிடைத்ததில்லை. 

கேள்வி : திருநங்கைகளின் குறித்த கணக்கெடுப்பு தரவுகள் உங்களிடம் இருக்கிறதா? இல்லையென்றால் அதற்கு என்ன தீர்வு?
ஜீவா : கணக்கெடுப்பு பொறுத்தவரையில் 2007 - 2011 காலகட்டங்களில் தேசிய அளவிலான கணக்கெடுப்பின் போது, திருநங்கைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டிருந்தோம். ஆனால் அவர்கள் எங்களை 'ஆண்' என்று தான் பதிவு செய்வோம் என்றார்கள். மாற்றுப்பாலினம் என்ற பிரிவு இல்லை என்றார்கள். நாங்கள் எங்களைப் பெண்ணாக உணர்கிறோம். ஆகையால் 'பெண்' என்று தான் பதிவு செய்ய முடிந்தது. எங்கள் எண்ணிக்கை முழுவதும் பெண்களின் எண்ணிக்கையில் சேர்ந்துவிட்டது. என்னுடைய வாக்காளர் அட்டையில் கூட பெண் என்று தான் குறிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அரசு ஒரு முகாம் நடத்தி, அதில் திருநங்கைகள் தங்கள் அடையாள அட்டைகளில் பாலின மாற்றம் செய்து கொள்ளும் வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும்.

கேள்வி : உங்களுக்கான அரசுசாரா அமைப்புகள் பல இருக்கின்றன. அதில் பதிவு செய்யப்பட்டுள்ள திருநங்கைகள் பற்றி உறுதியான தரவுகள் இல்லையா?
ஜீவா : அப்படி புள்ளிவிவரங்களோடு சொல்ல முடியாது. 1994 காலகட்டத்திலேயே திருநங்கைகளின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்று பதிவாகியிருந்தது. இப்பொழுது அதைவிட அதிகரித்திருக்குமே தவிர குறைந்திருக்காது. உறுதியான தரவுகள் எங்களுக்குக் கிடைத்தால் தான் சரியான எண்ணிக்கையைச் சொல்ல முடியும்.
மானு : இதற்கு என்ன தீர்வு என்றால், அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது  ஆண், பெண் பிரிவுகளோடு மாற்றுப்பாலினத்தவர் என்ற தனிப்பிரிவும் இருக்க வேண்டும். 
ஸ்டெல்லா எல்லா விண்ணப்ப படிவங்களிலும் மாற்றுப்பாலினத்தவர் என்ற பிரிவு இருப்பதில்லை. பெரும்பாலும் ஆண், பெண் என்ற பிரிவு மட்டுமே உள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பேருந்துகளில், தொடர் வண்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தனி இருக்கைகள் இருப்பது போன்று எங்களுக்கும் தனி இருக்கைகள் வேண்டும். 
கேள்வி : இந்த சூழலில் சமூக அளவில் என்னென்ன மாற்றங்களை எதிர்ப்பார்க்கிறீர்கள்? உங்கள் திருநங்கைகள் சமூகத்திற்குள்ளேயே என்னென்ன மாற்றங்கள் நிகழ வேண்டும்?
மோனி : இன்றைய சமூகம் கொஞ்சம் மாறியிருக்கிறது. ஓரளவிற்கு எங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் 'கிuஸீtஹ்' என்று அழைக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கின்றது. கேலிப்பேச்சுகள் இன்றும் தொடர்ந்தாலும், முன்பிருந்த அவல நிலை இப்போது இல்லை. வேலைவாய்ப்பு வசதி மட்டும் அதிகப்படுத்தினால் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் இருக்கும். 
நிர்மலா : திரைப்படங்களில் எங்களை கேலியாக சித்தரிக்கிறார்கள். நாங்கள் செய்யும் தவறுகளை எல்லாம் சொல்கிறீர்கள், ஆனால் நாங்கள் செய்யும் நன்மைகளை மட்டும் ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்?
சந்தனா : ஆண்களில் சிலர் கொலை செய்கிறார்கள், அதற்காக எல்லா ஆண்களையும் கொலை காரர்கள் என்று சொல்வீர்களா? சில பெண்கள் தவறு செய்கிறார்கள், அதற்காக எல்லா பெண்களின் மீதும் குற்றம் சுமத்துவதில்லையே? ஆனால் ஏதோ ஒரு திருநங்கை தவறு செய்தால் மட்டும் ஏன் ஒட்டுமொத்த திருநங்கைகளையும் குற்றவாளிகளாக்குகிறீர்கள்? முதலில் இந்த மனநிலை மாறவேண்டு.

கேள்வி : வேலைவாய்ப்புகளை திருநங்கைகள் தட்டிக் கழிப்பதாக ஒரு கருத்து உள்ளதே?
சந்தனா : அப்படி எதுவும் இல்லை. நான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். என் திறமைக்கேற்ற எந்த வேலையையும் செய்ய நான் தயார். ஆனால் தரமாட்டார்கள். "2000 ஆண்களுக்கு இடையில் நீ எவ்வாறு பணி செய்ய முடியும்?" என்று கேட்கிறார்கள். வாய்ப்பேத் தராமல், நாங்கள் எந்த வேலையையும் செய்ய மாட்டோம் என்று சொல்வது அபத்தம்.
மானு : அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்புத் தர வேண்டும். அதற்கான சட்டத்தை அரசு இயற்ற வேண்டும். அப்பொழுது தான் இதுபோன்ற தவறான கருத்துகள் நீங்கும். குறைவான ஊதியத்தை தந்து, அதிக உழைப்பை சுரண்டுகிறார்கள். இதில் எங்கள் மீது எந்த தவறும் இல்லை.
நிர்மலா : எங்களை போன்ற திருநங்கைகள், சிறுவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறியவர்கள். கல்லூரிக் காலங்களில் வெளிவந்தவர்களும் இருக்கிறார்கள். இதனால் எங்கள் சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் என எதுவும் எங்களிடம் இருப்பதில்லை. நாங்கள் வேலைவாய்ப்பின்றி தவிப்பதற்கும், உடலுழைப்பால் சுரண்டப்படுவதற்கும் இதுவே காரணமாக அமைந்துவிடுகிறது.
ஸ்டெல்லா : இப்பொழுது ஒரு நிறுவனத்தில் ஒரு ஆண் பத்தாயிரம் ரூபாய் ஊதியமாக பெறுகிறான் என்றால், அதே வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கு ஏழாயிரம் ரூபாய் தருகிறார்கள். ஒரு திருநங்கைக்கு நான்காயிரம் ரூபாய் தான் தருகிறார்கள். ஏன் இந்த வேறுபாடு? இந்த வருமானத்தை வைத்து கொண்டு நாங்கள் எப்படி வாழ்வது?

கேள்வி : அடுத்த தலைமுறை திருநங்கைகளை, இப்போதிருக்கும் சமூக அவலங்களிலிருந்து விலக என்ன செய்கிறீர்கள்?
நிர்மலா : நான் திருநங்கையாக கடை கேட்டு கொண்டிருந்தவள்தான். பிறகு, நான் படித்திருக்கிறேன் என்பதை அறிந்து, ஒரு திருநங்கை அமைப்பில் கள ஆய்வாளராக பணியமர்த்திருக்கிறார்கள். 
ஜீவா : முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, திருநங்கைகளின் பாரம்பரிய தொழில் என்பது கடைகேட்பு தான். அப்பொழுது அதற்கான வாய்ப்பு மட்டுமே இருந்தது. இப்பொழுது தான் ஓரளவிற்கு சமூக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஆகையால் எங்களுக்கு அடுத்து வரும் திருநங்கைகளுக்குப் பல்வேறு வாய்ப்புகளை நோக்கி வழிகாட்டுகிறோம். இந்த நிலையை இன்னும் சீராக்க, அரசு மட்டும் போதாது.  தனியார் நிறுவனங்களும் எங்களைப் போன்ற திருநங்கைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். எங்கள் மீதான அனுதாபமோ, இரக்கமோ எங்களுக்கு தேவையில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் முதுகலை படிப்பை முடித்திருந்தால் வேலை கிடைக்கும் வரை அரசாங்கமே அவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது. அது போன்று நம் நாட்டிலும் வழங்க வேண்டும். 

கேள்வி : உங்களின் உரிமைக்காக முகம் தெரியா நபர்களிடம் இத்தனைப் போராட்டங்களையும் வலிகளையும் வேதனைகளையும் தாங்கும் நீங்கள், உங்கள் பெற்றோரிடம் உங்கள் நிலையை புரிய வைத்திருந்தால், வீட்டை விட்டு வெளியேறும் அவசியம் இருந்திருக்காதே?
ஸ்டெல்லா : உறவினர்களின் இழிச்சொல்லுக்கு பயந்தே நிறைய பெற்றோர்கள் எங்களை ஒதுக்குகிறார்கள். நாங்களும் பெற்றோருடன் இருக்கவே விரும்புகிறோம். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல், பெற்றோர்களை சிரமத்திற்குள்ளாக்க கூடாது என்ற எண்ணத்திலேயே வெளியேறுகிறோம். 

கேள்வி : இறுதியாக இதற்கெல்லாம் என்ன தீர்வு?
மானு : அரசு எங்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடுத் தரவேண்டும். ஊடகங்கள் எங்களைப் பற்றிய சரியான புரிதலோடு செய்திகள் வெளியிட வேண்டும். திருநங்கை ‘தாரா’ மரணத்தில் உள்ள மர்மம் பற்றி எந்த ஊடகங்களும் கவலைப்படவில்லை. இதே ஒரு பெண்ணோ, ஆணோ இப்படி இறந்திருந்தால் ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருக்குமா? 
நிர்மலா : நான் டிப்ளமோ சிவில் படித்திருக்கிறேன். ஒரு தனியார் அமைப்பில் பணிபுரிகிறேன். என்னைப் போன்றோரை பொது சமூகத்திற்கு அறிகமுகப்படுத்தினால், புதிய வேலை வாய்ப்பும், என் குடும்பத்தினருடன் இணையும் வாய்ப்பும் கிடைக்கும்.
மோனி : எங்களை போன்றோரை பற்றியும் நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் செய்திகளும் கட்டுரைகளும் வெளியிட்டால் பொது மக்களுக்கு எங்களை பற்றிய விழிப்புணர்வு வரும். தகுதியான திருநங்கைகளைப் பற்றிய தகவல்களை வெளியிட்டு, அவர்களுக்கு கல்வி உதவியோ, வேலைவாய்ப்போ பெற்று தந்தால் எங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்.
சந்தனா : மகளிர் தினம் பற்றி மட்டும், அந்த வாரம் முழுவதும் விவாதங்கள், நிகழ்ச்சிகள், செய்திகள் எல்லாம் வரும். ஆனால் திருநங்கைகள் தினம், ஒரு மணி நேர நிகழ்ச்சியோடு முடிந்துவிடும். திருநங்கைகள் தினம் என்ற ஒன்று இருப்பதே பலருக்கு தெரியாது. நாங்களும் படித்திருக்கிறோம், எங்களுக்கும் வேலைவாய்ப்பு தந்தால் சிறப்பாக செயல்படுவோம்.

நேர்முகம் -சகா

ஞாயிறு, 18 நவம்பர், 2018

நூறு தாய்க்கு இணையாய் ஒரு நூரி



தன் பாலினமாற்றத்தை உணர்ந்த நாள் முதல் தனித்தே வாழ்ந்து வந்த நூரியின் அரவணைப்பில் இன்றைக்கு 50 குழந்தைகள் வளர்க்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு மட்டுமல்லாது ஆண்கள், பெண்கள் என்று 100க்கும் மேற்பட்டவர்களை தத்தெடுத்து தாயாக உருவெடுத்திருக்கிறார். திருநங்கையாக இருப்பதால் சமூகம் ஒதுக்குகிறது என்று புலம்பும் சராசரி திருநங்கைகளுக்கு நடுவே முன்மாதிரியாக திகழ்ந்து சமூக அங்கீகாரத்துடன் பல்வேறு தளங்களில் தனக்கென ஓரிடத்தை தக்க வைத்திருக்கும் திருநங்கை நூரி தானொரு எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர் என்பதை மிகவும் துணிவுடன் கூறி வருபவர். தன்னம்பிக்கைக்கு இலக்கணமாக திகழ்ந்துவரும் அவருடன் நாம் மேற்கொண்ட நேர்காணல். 

கேள்வி : உங்களின் இளமைக்காலம் பற்றி கூறுங்கள்? 

சிறுவயதிலேயே என்தாயார் இறந்துவிட என்னுடைய அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் என்னுடைய 13வது வயதில் எனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்தேன். நடை, பாவனை, கூச்சம், வெட்கம் என்று பெண்மைக்குரியதாக கூறப்படும் அடையாளங்கள் எனக்குள் நிகழ்ந்தது. இதை மிகப்பெரிய அவமானமாக கருதிய சித்தி என் அப்பாவிடம் கூற என்னை அடித்துத் துன்புறுத்தத் தொடங்கினார்கள். அதேநேரம் என் சித்தியின் தம்பியால் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளானேன். இதிலிருந்து தப்பிக்க அந்த வயதிலேயே நான் சென்னைக்கு வந்தேன். சில இடங்களில் பணியாற்றினேன்.அந்த நேரத்தில் என் தந்தை நோய்வாய்பட்டு சென்னையில்தான் தங்கியிருந்தார். அந்த செய்தி கேள்விப்பட்டு அவரை பார்க்கப் போனேன். அவர் இரண்டு நாளில் இறந்துவிட்டார். பின்னர் என்னுடைய சித்தி எனக்கு திருமணம் செய்துவைக்க ஆசைப்பட்டு ஒரு பெண்ணையும் பார்த்து முடிவு செய்த கையோடு திருமணப் பத்திரிகை உள்ளிட்ட எல்லா வேலைகளையும் செய்துவிட்டார். இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை நாம் பாழாக்கக்கூடாது என்கிற உறுதியோடு நான், அங்கிருந்து தப்பித்து மும்பைக்கு சென்று சேர்ந்தேன். அங்கு பாலியல் தொழிலாளியாக இருந்தேன். எங்களுக்கு இருந்த வாய்ப்பு ஒன்னு பிச்சை எடுக்கறது, இல்லைனா செக்ஸ் தொழில் செய்யறது. இப்படித்தான் எங்கள் நிலை இருந்தது. அந்த நிலைக்கு நானும் சென்றேன். மேலும் பணம் சம்பாதிக்கவும், நகைநட்டு சேக்கவும் இதுதான் எண்ணமாக இருந்தது.

கேள்வி : காதலை கடந்து போகாத திருநங்கையர் இருக்க முடியாது. உங்களின் வாழ்வில் நிகழ்ந்த அந்த காதல், திருமணம் போன்ற மகிழ்ச்சியான தருணத்தை கூறுங்கள்...? 

நான் மும்பையில் இருந்த போது ராணுவத்தில் பணியாற்றும் தத்தா என்பவருக்கும் எனக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் உயிருக்குயிராக பழகத் தொடங்கினோம். அந்த சமயத்தில் அவருக்கு சென்னைக்கு பணி மாறுதல் கிடைத்தது. அதனால் நானும் அவருக்கு முன்னதாக சென்னைக்கு வந்து ஒரு குடிசை வீட்டை வாடகைக்கு எடுத்தேன். என் வீட்டின் அருகிலேயே இன்னொரு குடிசையை வாடகைக்கு எடுத்து இன்னும் சில திருநங்கைகளை தங்க வைத்தேன். அங்கே நானும், அவர்களும் பாலியல் தொழில் செய்து வந்தோம். தத்தாவும் ஒரு மாதம் கழித்து சென்னை வந்து சேர்ந்தார். அப்பொழுதெல்லாம் நானும், அவரும் காதலிப்பதோடு மட்டுமே நிறுத்திக் கொண்டோம். வேறு எந்த உறவையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதற்குக் காரணம் சட்டபடி என்னை திருமணம் செய்து கொண்டால்தான் என்னை நீங்கள் தொடலாம் என்று உறுதியாக கூறியிருந்தேன்.  

கேள்வி : உங்களின் எண்ணம் ஈடேறியதா? 

என் எண்ணத்தை ஏற்றுக் கொண்ட தத்தாவும் என்னை திருமணம் செய்துகொள்ள விரும்பி அவரின் குடும்பத்தாரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அவர் குடும்பத்தார் அனைவரும் என்னை பெண் என்றே நினைத்து அன்போடு அரவணைத்தனர். எங்கள் திருமணத்திற்கு இரண்டு நாள்கள் இருந்த நிலையில் அவர்களின் குடும்ப வழக்கப்படி நெற்றியில் பச்சைக்குத்திக் கொள்ளச் சொன்னார்கள். அதில் உடன்பாடு இல்லாத நான் பச்சைக் குத்திக்கொள்ள மறுத்ததால் எனக்கும் தத்தாவுக்கும் வாக்குவாதம் வந்தது. அப்பொழுது கோபத்தில் என் குரலை கொஞ்சம் உயர்த்தி கத்தினேன். அதுவரை என்னை பெண் என்று நம்பிக் கொண்டிருந்த தத்தாவின் குடும்பத்தினர், நானொரு திருநங்கை என்ற உண்மையை தெரிந்து அதிர்ச்சியடைந்த அவர்கள், ஒரு பொட்டைய அழைத்து வந்து திருமணம் செய்கிறாயே என்றுகூறி என்னோடும், தத்தாவோடும் சண்டை போடத்தொடங்கினர். அப்பொழுது தத்தா அவள் பெண்ணா? ஆணா? என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். என்னைப் பொறுத்தவரை அவள் பெண். அவளை நான் விரும்பிவிட்டேன். இனி அவள்தான் என் மனைவி என்று மிகவும் உறுதியாக கூறினார். அவரின் அன்பு என்னை நெகிழச் செய்தது. அதனால் அவருக்காக பச்சை குத்திக் கொண்டேன். திருமணமும் நடந்தது. 

கேள்வி : பெரிய போராட்டத்திற்குப் பிறகு உங்களின் திருமணம் முடிந்திருக்கிறது. அதன் பின்னர் எப்பொழுது சென்னை வந்தீர்கள்?

திருமணம் முடிந்து தத்தாவின் வீட்டிற்கு வந்த உடனே முதல் சோதனையாக எனக்கு மஞ்சள் காமலை வந்துவிட்டது. அந்த ஊரில் மருத்துவ வசதிகள் இல்லாததால் என் உடல் நிலை மிகமோசமானதால், சென்னையில் சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று இருவரும் முடிவு செய்து சென்னைக்கு வந்து சேர்ந்தோம். என் உடல் மீண்டும் பழைய ஆரோக்கியத்திற்கு திரும்பியது. பின்னர் இருவரும் ஒன்றாக சில மாதங்கள் சென்னையில் வாழ்ந்த நிலையில் அவருக்கு பணியிட மாற்றம் வந்தது. பல இடங்களுக்கு பணியிட மாற்றத்தில் சில இடங்களுக்குச் சென்ற என்னால் அவருடன் தொடர முடியவில்லை. அதனால் நான் சென்னையிலேயே இருப்பதாக முடிவுசெய்து அவர் மட்டும் சென்றார். அவர் இல்லாத காலங்களில் நான் செய்த தவறால் எனக்கு மிகப் பெரிய பரிசாக எச்ஐவி தொற்று ஏற்பட்டது.

கேள்வி : உங்கள் கணவருக்கு அதைப்பற்றி கூறியிருந்தீர்களா?

அந்த நேரத்தில் அவர் வெளிமாநிலத்தில் இருந்ததால் முதலில் நான் சொல்லவில்லை. இடைப்பட்ட காலத்தில் ஒருமுறை பத்துநாள் விடுப்பில் அவர் வந்தபொழுது எனக்கு வந்துள்ள பாதிப்பைப் பற்றி அவரிடம் வெளிப்படையாக கூறினேன். ஆனால் அதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. மாறாக பெருந்தன்மையோடு அரவணைத் துக் கொண்டார். பயிற்சி முடிந்தபிறகு தன்னுடனே வைத்துப் பார்த்துக் கொள்வதாக சொல்லிச் சென்றவரின் இறந்த செய்திதான் எனக்குக் கிடைத்தது. அவர் இறந்தது 1991ஆம் ஆண்டு.

கேள்வி : எச்ஐவி பாதிக்கப்பட்ட பிறகு அந்த மனப்போராட்டத்தில் இருந்து மீண்டது எப்படி...? நீங்கள் மேற்கொண்ட பணிகய் என்ன...?

உண்மையில் என்னுய் தைரியத்தை வளர்த்து தன்னம்பிக்கை ஊட்டியவர் டாக்டர் உஷா ராகவன் என்பவர்தான். அப்பொழுதே நான்கு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தேன். அவர்களின் எதிர்காலத்தை எண்ணியும் என் நிலையை எண்ணியும் அழுதுகொண்டே இருந்தேன். இதை தெரிந்து கொண்ட டாக்டர் உஷா என்னைத் தேடி வீட்டிற்கே வந்துவிட்டார். 1993 வரை அவர் எனக்கு உதவினார். பின்னர் ஒரு என்ஜிஓவில் களப்பணியாளராக வேலை கிடைத்தது. அதன்பிறகு அடுத்தடுத்து என்ஜிஓக்களில் வேலை செய்து ‘ஐஎன்பி’ங்கற நிறுவனத்தில் துணைச் செயலாளராக பொறுப்போடு 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்தேன். அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் எனக்கு உடன்பாடு இல்லாததால் அந்த வேலையை உதறிவிட்டு வெளியே வந்தேன்.1998 ஆம் ஆண்டு எச்ஐவியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடங்கப்பட்ட ‘CAN’ (கம்யூனிட்டி ஆக்ஷன் நெட்வொர்க் ) என்கிற என்ஜிஓவில் சேர்ந்து 3 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் கம்யூனிட்டி மக்களுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறச் செய்வது தொடர்பான பணியை செய்துவந்தேன். 

கேள்வி : நீங்கள் ஒரு திருநங்கை... எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்... அப்படியிருக்க வேலை பார்த்த இடங்களில் எப்படியான அனுபவம் கிடைத்தது...?

எச்ஐவியால் பாதிக்ககப்பட்டவர்களின் கூட்டமைப்பே என்னை கேவலமாக பார்த்தது. கேலி பேசினார்கள். என்னைப் பார்த்தவுடன் கைகொட்டி சிரிப்பார்கள். அப்பொழுதெல்லாம் நான் நினைத்துக் கொள்வேன். இவர்களைவிட நான் எந்தவிதத்தில் குறைந்தவளாக தெரிகிறேன். இன்னும் சொல்லப் போனால் அவர்களைவிட நான்கு மடங்கு வேலைகளை பார்த்து வந்தேன். அப்படியிருக்க ஏன் நம்மை கேலி பேசுகிறார்கள் என்று மனப்போராட்டத்துடனே இருப்பேன்.

கேள்வி : எஸ்ஐபி+ நிறுவனத்தையும் எஸ்ஐபி நினைவு அறக் கட்டளையையும் எப்பொழுது எப்படி துவங்கினீர்கள்? 

டாக்டர் ஜோசப் என்பவர் நூரியம்மா நீங்கள் பல இடங்களில் வேலை செய்திருக்கிறீர்கள். உங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்று எண்ணை ஊக்கப்படுத்தி தனி அமைப்பை துவங்கச் சொன்னார். அதற்கு நான் மூன்றாம் வகுப்புதான் படித்திருக்கிறேன்... என்னால் எப்படி முடியும் என்று கேட்டேன்... உங்களால் முடியும்.. தைரியமாக செய்யுங்கள்... என்றார்...அவர் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக 2001ஆம் ஆண்டு எஸ்ஐபி+ (தென்னிந்திய எச்ஐவியால் பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பு) நிறுவனத்தை தொடங்கினோம். இதில் பல வேலைத் திட்டங்கள் கிடைத்தன. குறுகிய காலத்தில் பெருமுயற்சி எடுத்து இந்த நிறுவனத்தை வளர்த்தோம். இதற்கு துணையாய் இருந்த செல்வி, இந்திரா, பழனி ஆகியோர் எச்ஐவியால் இறந்துவிட்டனர். அவர்களின் நினைவாகவே குழந்தைகள் இல்ல அறக் கட்டளையை 2003ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறோம். 

கேள்வி : உங்களுக்குப் பின்னால் எச்ஜவியால் பாதிக்கப்பட்ட பலர் இறந்து போயிருக்கிறார்கள். ஆனால், உங்களுக்கு அந்த நோள் இருப்பதற்கான அறிகுறிகூட தெரியவில்லையே... காரணம் என்ன?

எனக்குப் பின்னால் எச்ஜவியால் பாதிக்கப் பட்டவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்துவிட்டார்கள். என்னுடைய ஆரோக்கியத்திற்குக் காரணம் என்னுடைய கட்டுப்பாடும், நடவடிக்கை களும்தான். நேரத்திற்கு உணவு, தேவையான மருந்து வாழ்விடத்தை தூய்மையாக வைப்பது, அத்தோடு ஒழுக்கத்தை கடைபிடிப்பது என்று வாழ்வதினால்தான் நான் ஆரோக்யமாக இருக்கிறேன். 

கேள்வி : இன்றைக்கு எஸ்ஐபி இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் வளர்கிறார்கள். இந்த எண்ணம் எப்பொழுது உங்களுக்கு எழுந்தது?

2005ஆம் ஆண்டு தாம்பரம் சானிடோரியம் மருத்துவமனை அருகில் உள்ள குப்பைத் தொட்டி யில் ஒரு குழந்தை கிடப்பதாக எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. உடனே என் தோழி டாக்டர் ஐஸ்வர்யாவுடன் போய் பார்த்தோம். அங்கே பிறந்து இரண்டே நாளான ஒரு குழந்தையை பாட்டில் கழுவும் ஒரு பெண்மணி வைத்துக்கொண்டு எங்களுக்காக காத்திருந்தார். அவரிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு வந்தோம். அந்த குழந்தைக்கு இப்பொழுது 11வயதாகிறது. அவளால்தான் இந்த இல்லமும் தொடங்கப்பட்டது. ஆக, எங்கள் இல்லத்துக்கும் அதே 11வயதுதான். 

கேள்வி : மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த நீங்கள் நிறைய நாடுகளுக்கு பயணம் போய்வந்ததாக கேள்விப்பட்டோம்? என்ன காரணங்களுக்கா அங்கே பயணம் போனீர்கள்? 

இதுவரை 24 நாடுகளுக்கு போய் வந்திருக்கிறேன். முதல் நாடு ஆஸ்திரேலியா. எல்லா நாடுகளிலும் எச்ஐவி குறித்த கருத்தரங்கில் பேச்சாளராக கலந்து கொண்டேன். மொழி எனக்கு ஒரு பிரச்சனையே கிடையாது. எப்படி என்றால், ஆங்கில உச்சரிப்புகளை தமிழில் எழுதி படித்துவிட்டு பவர்பாயிண்ட் மூலம் என்னுடைய கருத்தை வெளிப்படுத்துவேன். இதற்கு என்னுடைய பணியாளர்கள் நன்கு உதவி செய்வார்கய். மலேசியாவைப் பொறுத்தவரை கிறிஸ்துவ என்ஜிஓ மூலமாக பைபிள் படிப்பிற்காக சென்றேன். எங்கேயும் நான் பயந்து நின்றது கிடையாது. 

கேள்வி : உங்களால் மறக்கமுடியாத சம்பவம்எது? 

1998ஆம் ஆண்டு தமிழ்நாடு அரவானிகள் சங்கத்தின் துவக்கவிழாவிற்கு போயிருந்தேன். அங்கு வந்திருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் என்னுடைய பேட்டிஎடுத்து வெளியிட்டிருந்தார். அதில் நான் எச்ஐவியால் பாதிக்கப்பட்டதற்கான காரணத்தை கூறியிருந்தேன். அதை படித்த மற்ற திருநங்கைகள், என்னால் அவர்களின் தொழில் பாதிக்கப்படுவதாக கூறி என்னை கொளுத்த வேண்டும் என்று 10லிட்டர் பெட்ரோலுடன் என் வீட்டிற்கு வந்துவிட்டனர். நான் அதை கண்டு அஞ்சாமல் அவர்களுக்கு உண்மை நிலையை புரிய வைத்தேன். அதனால் அந்த பிரச்சனை ஓய்ந்தது. என்றாலும் அந்தப் பிரச்சனை இன்றும் என் மனதில் உள்ளது. 

கேள்வி : உச்சநீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித் திருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்? 

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு திருநங்கைகளின் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி என்றுதான் சொல்வேன். குடும்பத்தார் கூட அங்கீகரிக்காமல் வெறுத்து ஒதுக்கப்படும் மாற்றுப் பாலினத்தவருக்கு இந்த தீர்ப்பு ஒரு அருமருந்து. தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திருநங்கைகளுக்காக பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. இதுபோல் எல்லா இடங்களிலும் இந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும். 

கேள்வி : எங்களை சமூகம் அங்கீகரிப்பதில்லை என்கிற திருநங்கைகளின் குற்றச் சாட்டை எப்படி பார்க்கிறீர்கள்? 

சமூகம் அங்கீகரிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். இப்பொழுது சமூகம் எவ்வளவோ மாறிவருகிறது. மேலும் மேலும் சமூகத்தை குற்றம் சொல்லாமல் சமூகத்தோடு ஒத்து வாழவேண்டும். நம்முடைய பிரச்சனைகளை மட்டும் பேசிக்கொண்டிருக் காமல் சமூகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளிலும் நாம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் சமூகத்தின் அங்கீகாரம் முழுமையாக கிடைக்கும். 

கேள்வி : திருநங்கைகள் மாற்றிக்கொள்ள வேண்டியவை எவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்? 

தாங்கள் சம்பாதிப்பதில் பெரும்பகுதியை தங்களை அழகுபடுத்திக் கொள்ளவும், ஆடம்பரமாக வாழவுமே சில திருநங்கைகள் செலவழிக்கின்றனர். இவற்றை குறைத்துக்கொள்ள வேண்டும். சேமிப்பு என்பதே பல திருநங்கைகளுக்கு இல்லாமல் இருக்கிறது. தாங்கள் சம்பாதிப்பதை சேமிக்க பழக வேண்டும். அதேபோல் குறைந்த ஊதியம் என்றாலும் சுயமரியாதைகெடாத வேலை கிடைத்தால் தயங்காமல் செய்ய வேண்டும். காதலுக்கு அடிமையாகாமல் இயல்பாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அதுவே நான் விரும்பும் மாற்றம். 

கேள்வி : உங்களின் இலக்கு என்ன? 

நான் மறைந்தாலும் இந்த சமூகத்திற்கு ஏதாவது நன்மை செய்திருக்கவேண்டும். அப்படியான ஒரு பணியை என் வாழ்நாளுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. எங்களின் குழந்தைகள் இல்லத்திற்கு என்று சொந்தமாக இடமோ, கட்டடமோ கிடையாது. அதனால் வாடகை வீட்டில்தான் இருக்க வேண்டிய அவலத்தில் இருக்கிறோம். அந்த எஸ்ஐபி இல்லத்திற்கு என்று சொந்தமான கட்டடத்தை கட்டுவதற்கான முயற்சியில் நாங்கள் இறங்கியிருக்கிறோம். அந்த பணியை வெகுவிரைவில் முடிக்க வேண்டும் என்பதே என்னுடைய தற்போதைய இலக்கு. அதற்கான முயற்சிகள் நல் இதயம் படைத்தவர்களின் உதவியோடும், ஆதரவோடும் எடுக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் எங்கள் குழந்தைகளுக்கான இல்லம் சொந்த கட்டடத்தில் இயங்கும். 

நேர்முகம் - சகா

வெள்ளி, 16 நவம்பர், 2018

பாரத பு(ருட)த்திரனே போற்றி... போற்றி...


ஈராயிரம் நரபலியில்
இறுமாப்பாய் தான் நடந்து
அரியணையில் வந்தமர்ந்த
அனுமானே போற்றி... போற்றி...
ஓயாது உழைத்திடவே
நாடோடியாய் சுற்றிவரும்
ஒப்பாரும் மிக்காருமில்லா
ஓடு(ம்) காளியே போற்றி.. போற்றி...






ஊரெல்லாம் சுத்திவந்து
ஊறுகாயாய் எம்நாட்டை
கூறுபோட்டு விற்றுவரும்
வித்தகரே போற்றி... போற்றி...
மலைமுழுங்கியாம் அதானிக்கு
மணிமணியாய் அள்ளித்தரும்
மாமனியே போற்றி... போற்றி...
ஆதாரில் எம்கமுக்கம்
அத்தனையும் தான் திருடி
அம்பானிக்கு கொடுத்திட்ட
அருட்கொடையே போற்றி.. போற்றி...
கருப்புப்பணம் கள்ளப்பணம்
கடுகு டப்பியில் கண்டெடுத்து
களவாடி கொண்டுசென்ற
க(ள)லை வானியே போற்றி... போற்றி...








நாட்டுக்கே படியளந்த
நாதியற்ற உழவனையும்
நடுத்தெருவில் அலையவிட்டு
நகைதிட்ட நகைமுகனே போற்றி... போற்றி..
நாட்டுக்கே தொண்டாற்றும்
நன்நடிகையுடன் தான் கலந்தே
நாட்டை முன்னேற்றும்- செல்பி
நாயகனே போற்றி... போற்றி...
இல்லாத குப்பையெல்லாம்
அள்ளாமல் அள்ளிச்செல்ல...
ஸ்வ(உ)ச்சா பாரத்தை பெத்தெடுத்த
உ(ன்ம)த்த(ம)னே போற்றி... போற்றி...







காமத்தில் திளைப்போரும்
காடறுத்து தின்போறும்
காவி(லி)ச்சாமியான போது
காத்தருள்வாய் போற்றி... போற்றி...
கோட்டு சூட்டு பத்து லட்சம்
பூட்டுங்கூட மாட்டி வந்து
"நீட்"டி கூட்டி முழங்கவந்த
நீலிக்கண்ணீராய் போற்றி... போற்றி...
கோமாதவை தத்தெடுத்த
கோமா(ளி)னே போற்றி... போற்றி...
புதிய இந்"தீயா"வை பெத்தெடுத்த
பாரத பு(ருட)த்திரனே போற்றி... போற்றி...

- சகா 
(04/09/2017)

மங்குனியே ஆண்டிடுவாய்...

மானம் இழ
மண்டியிடு
மண்ணையும் நக்கு
மாண்புமிகு ஆவாய்...








கண்ணை மூடு
கருத்தை விடு
காட்டியும் குடு
கோட்டையில் சேர்வாய்...
கொள்கை துற
கொண்டாடித் திரி
கூடியும் மகிழ்
கூட்டணியில் சேர்வாய்...

ஊழலை குடி
உத்தமனாய் நடி
ஊமையாய் விடி
ஊரையே விற்பாய்...





நீட்டைக் கொடு - சமூக
நீதியை கெடு
டெங்கையும் மறு - மக்கள்
சங்கை அறுவாய்...
அஞ்சுவது கலை
ஆளுமை தொலை
அண்டியே பிழை
ஆட்சியில் நிலைவாய்...
இலையை கிழி
மலரை பிடி
மதமும் கொள்
மனிதம் கொல்வாய்...







பகுத்தறிவை இழி - தமிழர்
பண்பாட்டை பழி
பாரதமாத துதி
காவியில் கலந்திடுவாய்...









திராவிடம் இகழ்
ஆரியம் புகழ் - ஆட்சி
பங்கை பெறு
மங்குனியே ஆண்டிடுவாய்...!

-சகா
(17/11/2017)

அடைந்திடுவாய் சுதந்திரத்தை...?

ஆசிபாக்களும்
நந்தினிகளும்
தங்களின்
தொடையிடுக்கில்
ஒளித்திருக்கிறார்கள்..?
விட்டுவிடாதீர்
அவைகளைத்
தேடிக்கிழித்து
அடைந்திடுங்கள் உமது
பாலியல் சுதந்திரத்தை...!

இளவரசன்களும் 
சங்கர்களும்
உம் கவுரவத்தை
கெடுத்திடு முனைகிறார்
அனுமதியாதீர்...?
அவர்களை
கருவருத்தேனும்
காத்திடுவீர் உமது
ஜாதி சுதந்திரத்தை...!
 

மேலவலவுகளும்
உத்தபுரங்களும்
தேசத்தின்
அவமானங்கள்
என்பர்
அங்கிகரிக்காதீர்...?
இன்னும்
பெருஞ்சுவர்
எழுப்பியேனும்
நிலைநாட்டுவீர் உமது
தீண்டாமைச் சுதந்திரத்தை...!







அனிதாக்களும்
பிரதீபாக்களும்
உரிமை கோருகிறார்கள்
ஒப்புக்கொள்ளாதீர்...!
அவர்களை
காவு வாங்கியாகிலும்
மீட்டெடுங்கள் உமது
கல்விச் சுதந்திரத்தை...?







சேரிகளும்
குடிசைகளும்
அழகை கெடுக்கவே
அமைக்கின்றனர்
சகித்துக்கொள்ளாதீர்...!
அவைகளை
கொளுத்தியேனும்
கொண்டாடுவீர்
தூய்மை சுதந்திரத்தை...?








ஸ்டெர்லைட் அனில்களும்
ஜிண்டால் பிரகாஷ்களும்
சுரண்டுகிறார் வளங்களையென்றே
தடுத்திடுவார்
கவலைகொள்ளாதீர்...?
எட்டுவழி தடுத்தாலும்
சுட்டுத்தடை நீக்கி
அடைந்திடுவீர்
தொழில் சுதந்திரத்தை







மல்லையாக்களும்
நீரவ் மோடிக்களும்
தேசம் கடந்து
அனாதைகளாய்
அலைகிறார்...?
அப்புலம் பெயர்ந்த
அன்றாடங்காய்ச்சிகளுக்கு
வங்கிச் சேவையால்
அளித்திடுவீர்
பொருளாதாரச் சுதந்திரத்தை...?







-சகா(15/08/2018)