வியாழன், 20 நவம்பர், 2014

என்னாத்தச் சொல்லுவேன் - அத எப்படித்தான் சொல்லுவேன்...?

நாட்டப்பத்தி எண்ணியதோ
நாதியத்து கெடக்குது...
நரவேட்டை ஆடியதோ
நாடாள வந்திருக்கு...
என்னாத்தச் சொல்லுவேன் - அத
எப்படித்தான் சொல்லுவேன்...?

சக மனுசன் கழிவகூட
அடுத்த மனுசஞ் சுமக்கது
கொஞ்சங்கூட வெக்கமில்ல
வெறுந்தரைய நக்கது
என்னாத்தச் சொல்லுவேன் - அத
எப்படித்தான் சொல்லுவேன்...?

சாராயம் வித்ததெல்லாம்
கல்வித் தந்தையாகுது
கல்விதர வக்கில்லாம
டாஸ்மாக்க தெறக்குது...
என்னாத்தச் சொல்லுவேன் - அத
எப்படித்தான் சொல்லுவேன்...?

குடிக்க கொஞ்சம் கூழுயில்ல
குடும்பம் கூடியழுகுது
கெடச்ச கூலி வாங்கியதோ
டாஸ்மாக்கில் நிக்குது...
என்னாத்தச் சொல்லுவேன் - அத
எப்படித்தான் சொல்லுவேன்...?

அடுச்சுபுடுச்சு எப்படியோ
அரசு வாத்தியாகுது....
அவன்புள்ள அங்கயில்ல
தனியாருல திக்குது
என்னாத்தச் சொல்லுவேன் - அத
எப்படித்தான் சொல்லுவேன்...?

அடிபட்டு விழுந்துபுட்டா
எந்த ரத்தமும் சேருது...
திருமணத்தில் மட்டும்தானே
ஜாதி சுத்தம் பாக்குது...
என்னாத்தச் சொல்லுவேன் - அத
எப்படித்தான் சொல்லுவேன்...?
-சகா

யுத்தம் செய்வோம் வா....

குற்றுயிராய்
வாழ்கிறது
மானுடம்...
உயிர்பிப்போம் வா…
தட்டியெழுப்பு
உன் காதலே
நமை வாழ்விக்கும்
.
மக்கள் சேர்
காதல் கூடு
அன்பெனும்
வெள்ளத்தை
அள்ளிப் பருகு
நீந்தியும் விளையாடு...

தயக்கம் தவிர்
உன்னிலும்
காண்கிறேன்
வெட்கம் ஓடி
பக்கம் வந்த
காரணத்தை...

மதம் பழி
ஜாதி இழி
எல்லை தாண்டு
மொழியும் கட
இது நமக்கான
யுத்தமல்ல
மானுடத்தின்
மீட்சிக்கும் தான்

நம் யுத்தத்தில்
கத்தியில்லை
ரத்தமில்லை
முத்தம் மட்டுமே
ஆயுதம்

முத்தம்
அன்பின் திறவுகோல்...
காதலுக்கும் ...
மெய்யோடு
மெய் கலக்கி
வாயோடு 
புரிவோம் வா
நல்லதொரு
யுத்தம்....

ஜாதி சுத்தமே
பண்பாடென பசப்பி
தடுத்திடுவார் நித்தம்
உன்மத்தம்
பிடித்தோருக்கு
எங்கே புரியும்
நம் முத்தம்

இருகை விரி
இறுக்கி அணை
நம்முள்
வெடித்துக் கிளம்பும்
வெப்பத்தால்
சுட்டுப் பொசுக்குவோம்
சனாதனிகளின்
ஆணவத்தை



வியர்வை பெருக்கி
சமூகத்தில் படிந்த
கலச்சார கறையை
கழுவிடுவோம் வா..

அவர்களின்
செவிப்பாறை
கிழியும் சத்தம்
நம் காதிலும்
ஒலிக்கட்டும்
ஆதலால்
இட்டுச் செல்
இன்னொரு
முத்தம்….

-சகா