வெள்ளி, 12 ஏப்ரல், 2019

ஜனநாயக சக்திகள் ஒன்றிணையாமல் சாதி ஒழியாது

- இயக்குநர் கோபி நயினார்
நேர்முகம் - சகா. சசிக்குமார்
 சமூக செயற்பாட்டாளர், சிறந்த புத்தக வாசிப்பாளர் என்கிற அடையாளங்களைத் தாங்கி நிற்கும் அறம் படத்தின் இயக்குநர் கோபி நயினாருடன் நமது இதழுக்காக நீண்டதொரு நேர்காணலை மேற்கொண்டோம். அடுத்தடுத்த பட வேளைகளிலும், களப்பணியிலும் ஓய்வின்றி செயலாற்றி வரும் அவர் நமக்காக நேரம் ஒதுக்கி நம்முடன் உரையாற்றினார். பேட்டியின் துவக்கத்திலேயே திரைத்துறை தொடர்பாக வேண்டாம் சமூகம் குறித்தும் அரசியல் குறித்தும் பேசுவோம் என்கிற நிபந்தனையோடே பேசத் தொடங்கினார் கோபி. மடைதிறந்த வெள்ளம் போல் சமூக கருத்துகளை வெளியிட்ட வேகமும், தெளிந்த நீரோடை போன்ற ஆழ்ந்த அரசியல் பார்வையும் நம்மிடையே பல சிந்தனைகளை விதைப்பதாக இருந்தது. அவருடனான உரையாடலின் தொகுப்பை இங்கே தருகிறோம்.

படைப்பாளி அல்லது களப்போராளி இதில் கோபி நயினார் என்பவர் யார்? 
களப்பணிதான் எனக்கான அடையாளம்
களப்பணி என்றால் எந்த மாதிரியானது?
இந்தியாவில் ஒரே ஒரு களப்பணிதான் இருக்கிறது. ஜாதியை ஒழிப்பதுதான் முதல் பணி. ஜாதியை ஒழித்த பிறகுதான் மற்ற எல்லா வேலைகளையும் நீங்கள் செய்ய முடியும். ஒரு அரங்கிற்குள் போகவேண்டுமானால் முதலில் கதவு திறக்க வேண்டும். அந்த கதவு திறக்காமல் நீங்கள் அரங்கிற்குள் போக முடியாது அல்லவா?. இந்தியாவில் புரட்சி உள்பட எதுவானாலும் ஜாதி ஒழிப்பை முன்னெடுக்காமல் எதுவுமுமே செய்யமுடியாது.
ஜாதி ஒழிப்பு சாத்தியப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன இருக்கின்றன? 
சாத்தியப்படுவதற்கான கூறுகள் இருக்கிறதா என்ற கேள்வியே தப்புதானே? அதாவது பாதிக்கவைக்கிறவன் ஒருத்தன் பாதிக்கறவன் ஒருத்தன். பாதிக்கப்படுபவர்களின் உரிமையயை நாம் பேசவேண்டும். அவர்கள் வாழனுமா வாழக்கூடாதா என்பதைத்தான் நாம் பேசவேண்டும். ஜாதியால் ஆணவக்கொலைகள் நடக்கின்றன. கோயிலுக்குள் நுழைய முடியவில்லை. படிக்க முடியவில்லை இதுமாதிரியான விசயங்கள் இருக்கிறதுதானே. சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மற்ற எல்லாத் தளங்களிலும் தாழ்த்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்தானே. அப்படியானால் இந்தப் பிரச்சனைகள் இருக்கின்றவரை சாத்தியக்கூறுகள் இருந்தேதீரும்.

ஜாதிஒழிப்பைச் செய்வதற்கான முன்னெடுப்புகள் என்ன எடுக்கவேண்டும்?
ஜாதி ஒரு சிஸ்டத்தோடு சம்பந்தப்பட்டது, அதற்க்கு எதிராக ஒரு முடிவ நீங்க எடுக்கவேண்டும் என்றால் இன்னொரு சிஸ்டத்த கிரியேட் பண்ணவேண்டிய தேவையிருக்கு. மக்களை அணித்திரட்ட, அவர்களை எல்லாம் இணைக்க ஒரு கோட்பாடு தேவைப்படுகிறது. தமிழ் தேசியராவதற்கோ, மிகப்பெரிய பாட்டாளிவர்க்க சர்வதிகாரத்தை முன்னெடுப்பதற்கோ என்று எது பேசினாலும் சரி ‘சாதி’ இங்கே ஒரு பெரிய தடையாக இருக்கிறது. அப்போ சாதி ஒழிக்காமல் நாம இங்கே எந்த வேலையும் செய்யமுடியாது. அப்போ சாதி ஒழிப்பையும் - தமிழ் தேசியத்தையும் ஒன்னா நிகழத்த முடியுமா? இல்ல, சாதி ஒழிப்பையும் - பாட்டாளிவர்க்க போராட்டத்தையும் ஒன்னா நிகழ்த்த முடியுமா? கண்டிப்பா நிகழ்த்த முடியும். ஆனால், இதில் எது முன் நிபந்தனையாக இருக்கு என்பதிலிருந்து தொடங்க வேண்டும்.
ஜாதி ஒழிப்பை பற்றி பேசும் பொழுது இடைச்சாதியும், தாழ்த்தப்பட்டவர்களும் இணைந்து செயல்படவேண்டிய காலகட்டத்தில் அவர்களை ஒருங்கிணைக்கிறதுக்கான வழிமுறைகள் என்ன?
ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டுமென்றால் அதை ஆணிடமிருந்துதானே மாற்றத்தை ஏற்படுத்தனும். அதுபோலத்தான் சாதியை யார் கட்டிக் காப்பாற்றுகிறார்களோ? அவர்களிடமிருந்ததுதான் தொடங்கனும். அவர்களிடமிருந்து சாதியை கைவிடுவதற்கான நெருக்கடியை நாம் இன்றை வரைக்கும் தரவேயில்லை. அதாவது இடைச்சாதிக்கும், தலித்துகளுக்குமான சண்டையாத்தான் அதைப் பார்க்கிறோம். இந்தியா சாதிகளால் உருவாக்கப்பட்ட ஒரு நாடு. இந்த நாட்டை ஒரு குறிப்பிட்ட சாதி மற்ற சாதிகளை சூதாடுது. இந்த சூதாட்டம்தான் சாதிய வன்கொடுமைகளா மாறியிருக்கு. அப்போ இடைச்சாதிகளோடு சண்டை போடுவதல்ல நம் வேலை. காலம் புள்ள அது யாருக்கு லாபம்னா, இந்த சாதி கட்டமைப்பை உருவாக்குகின்ற ஜாதியாளர்(நீணீstமீவீst)க்குத்தான். இடைச்சாதிக்காரனும் தாழ்த்தப்பட்டவனும் அடித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் சாதி அமைப்பின் திட்டம். சாதி ஒழிப்பு என்பது வேறு, இடைச்சாதிகளோடு சண்டையிடுவது வேறு, ஆக, பொதுசமூகத்தில் இருக்கிற ஜனநாயக சக்திகள் ஒன்றிணையாமல் சாதி ஒழியாது. 

அப்படி ஜனநாயக சக்திகள் ஒன்றிணைவதற்கு என்ன செய்ய வேண்டும்?
ஜனநாயக சக்திகள் ஒன்றிணைவதற்கு ஒரு பொது தன்மையை கண்டறிய வேண்டும். அந்த பொது தன்மைகள் தான் தமிழ்தேசியம் பேசுவதும், பாட்டாளிவர்க்க பிரச்சனைகளை கையிலெடுப்பதும். ஏனென்றால், இடைச்சாதியிடமும் தொழிலாளி இருக்கிறான், தாழ்த்தப்பட்டவர்களிடமும் தொழிலாளி இருக்கிறான். அவனும் தமிழ் பேசுகிறான், இவனும் தமிழ் பேசுகிறான். அப்ப நாம் எல்லாம் தமிழரா ஒருங்கிணையலாம். ஆனால், ஒருங்கிணையும் போது சாதி பிரிப்பு பிரச்சனையாகிறது. ஊர் தெருவில் இருந்தும், காலனி தெருவில் இருந்தும் ஒன்றாக ஒரு போராட்டத்திற்கு போறாங்கன்னு வைச்சுக்குவோம். போராட்டம் முடிஞ்சு திரும்ப இவங்க காலனிக்கும், அவங்க ஊர் தெருவுக்கும் போயிடுறாங்க. அப்ப வாழ்விடம், இருப்பிடம், வசிப்பிடம் என்னவா இருக்குதுன்னா தனியாகவும் உழைப்பு ஒரு இடத்திலும் இருக்கிறது. ஏன்னா இந்த சாதி அமைப்புதான் ரொம்ப ஆழமா ஊடுருவியிருக்குது. 
ஜாதியை பாதுகாப்பவர்களா யார் இருக்கிறார்கள்?
இந்தியாவில் யாரும் தலித்துகள் இல்ல, அத சொன்னா நீங்க நம்புவீங்களா? இந்தியாவில் தலித்துகள் இருப்பதாக சொல்பவர்கள் ஜாதியாளர்கள்(சிணீstமீவீst). நான் இந்த ஜாதி என்ற அடையாளத்தோடு யார் இருக்கிறது? ஜாதியை பாதுகாப்பவர்களா ஜாதி இந்துக்கள்தான் இருக்கிறார்கள். அதனால் தான் சொன்னேன், இந்தியாவில் தலித்துகள் கிடையாது என்று. இந்தியாவில் தலித்துகள் இருப்பதாக யார் சொல்றாங்கன்னா ஜாதி இந்துக்கள்தான் சொல்றாங்க. ஏன்னா? அவர்கள் ஜாதிய  வளர்த்தெடுக்கனும்னா நான் தலித்தா இருக்கனும், அதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். சமதளமா இருந்த நிலப்பரப்பை பள்ளமாகவும், கற்பிதமாக உருவாக்கப்பட்ட மேட்டை மேடாகவும் உருவாக்கப்பட்டதுதான் ஜாதி. இதைத்தான் புரட்சியாளர் அம்பேத்கரும் சொல்கிறார்.

அப்படியென்றால் ஜாதி என்ற மேட்டை கரைப்பது எப்படி?
சமதளத்தில் இருந்து ஒரு பள்ளம் தோண்டப்பட்டா, அந்த பள்ளத்தை நாம கண்டறிந்து  நிரப்பி சமன் படுத்த முடியும். ஆனால், ஜாதி இந்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பள்ளத்தை நிரப்ப முடியாது. அப்ப என்ன பண்ணனும்னா இந்த மேட்டை எடுத்து தூரப் போட்டுடனும். சமதளமா இருக்கிற ஒரு நிலப்பரப்பில் ஜாதிங்கிற மேட்டை உருவாக்கிய ஜாதியாளர்கள்(சிணீstமீவீst) தான் ஜாதியத்தை பின்பற்றுகிறார்கள். அதனால்தான் அவன் சொல்றான் இந்தியாவில் ஜாதி இருக்குன்னு. நாம ஜாதியை பின்பற்றல. தலித்துகள் எப்போதும் ஜாதி இருந்ததா சொல்லல. தலித்துகள் தங்கள் குழந்தைகளை யாருக்கும் திருமணம் செய்ய தயாரா இருக்கிறாங்க. ஆனால், ஜாதி இந்துக்களால் இப்படி ஒரு அறிவிப்ப கொடுக்க முடியுமா? 
ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் கோட்பாடுகள் சமதளத்தில் இருக்கும் போது தலித் அமைப்பினர் பெரியாரை ஏற்றுக்கொள்ளாத சூழலைப்பார்க்க முடிகிறதே?
நீங்க அப்படி பார்க்க முடியாது. தலித்துகள் எல்லா தலைவர்களையும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள்தான். காமராசர், அண்ணாதுரை, மார்க்ஸ் போன்ற பெயர்களை தலித் குடும்பங்களில் பார்க்க முடியும். ஆனால், திராவிட இயக்கங்களில், இடதுசாரிகளில் உள்ள ஒரு சிலரைத் தவிர சாதாரண ஜாதி இந்துக்கள் குடும்பங்களில் அம்பேத்கர்னு பெயர் வைப்பதை பார்க்க முடியாதே? பெரியாரிய சிந்தனையாளர்கள் நிறைய பேர் அம்பேத்கரை கொண்டாடுவதில்லை என்ற இடத்தில்தான் இந்த வேறுபாடு உண்டாகிறது. அது பெரியார் என்ற சித்தாந்தத்தின் தவறு இல்லை. அவரின் தத்துவங்களையும், கோட்பாடுகளையும் இன்னும் புரிந்து கொள்ளாதவர்களின் பிழைதான் அது. பெரியார் எங்கேயும் சாதியத்தை பேணி பாதுகாத்தவர் கிடையாது. சாதியம் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று பெரியாரியமும், இடதுசாரியமும் விரும்பியது இல்லை.

சிலர் திட்டமிட்டே பெரியாரை தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானவர் என்று கட்டமைக்கும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார்களே?
பெரியார் தலித்துகளுக்கு எதிரானவர்ன்னு எப்பொழுதும் நான் நம்பமாட்டேன். ஒரு தலைவரை மறுதலிப்பதில் வந்து முக்கியமான கவனம் தேவை, எச்சரிக்கை தேவை என்று நினைக்கிறேன். பெரியார் எதுவும் செய்யல என்பது வீண் பழி. அவர் வாழ்ந்த காலங்களில் இந்த சமூகத்திற்கு இடர்களை உருவாக்கியவர்களை எந்த சமரசமும் இன்றி எதிர்த்ததில் பெரியாரை போல் ஒருவரை பார்க்க முடியாது. பெண்கள் சம்பந்தமான பெரியாருடைய கருத்துகள் இன்றும் அவசியமானது. கடவுள் மறுப்பைப் பற்றி அவர் பேசிய கருத்துகள் மிக முக்கியமானது. மொழி குறித்து பெரியாருக்கு இருந்த அறிவு வேறுயாருக்கும் இருந்ததில்லைன்னு நான் நினைக்கிறேன். சாதி ஒழிப்பில் பெரியார்  அவர் வாழ்ந்த காலத்தில் திடகாத்திரமாக எவ்வளவு வேலை செய்ய முடியுமோ அவ்வளவு வேலை செய்தார், அந்த வேலையில் உங்களுக்கு எந்த சந்தேகம் இருக்கா? அதுதான் நமக்கு ரொம்ப முக்கியம். 
தந்தை பெரியாரையும் டாக்டர் அம்பேத்கரையும் நாம் எப்படி ஒப்பிட்டு புரிந்துகொள்வது?
புரட்சியளார் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் சமகாலத்தில் ஒரே மாதிரியான பிரச்சனைகளை வெவ்வேறு நிலைகளில் எதிர்கொண்டவர்கள். சனாதன தருமத்தை கடுமையாக விமர்சனங்கள் உருவாக்குவதின் மூலமாக, கிண்டல் செய்வதின் வழியாக, கேள்வி கேட்பதின் வழியாக தோலுரித்துக் காட்டியவர் தந்தை பெரியார். ஒரு ஆதிக்கம் இரண்டு தளங்களாக நிற்கும். 1. பொய்கதைகளை பேசுவதின் மூலமாக தன்னை நிரூபிக்க முயற்சி செய்யும். 2. அந்த பொய் கதைகளை மிகப்பெரும் வரலாற்று ஆய்வாக மாற்றுவதற்கு மிகப்பெரிய வேலை செய்யும். ஒரு ஆதிக்க சமூகம் பொய்க் கதைகளை உருவாக்கிய புராணக் கதைகளை எல்லாம் தந்தை பெரியார் கிழித்தெறிகிறார். 
அதேநேரத்தில் ஆரியர்கள் இந்த மண்ணின் மைந்தர்களாக, அதாவது தான் தான் ஒரு பூர்வகுடி சமூகம், பெரிய அறிவார்ந்த சமூகம் என்று நிரூபிக்க முயற்சிகள், திட்டமிடுதல் நடக்கும் போது, மிகப்பெரிய ஆய்வுகளோடு, அவர்கள் வரலாறு முழுவதும் மனித குலத்துக்கே எப்படி எதிரானவர்கள் என்பதை புரட்சியாளர் அம்பேத்கரை போல வேறுயாரும் ஆய்வுகள் செய்யவில்லை. அவருடைய புத்தகங்கள் மிக முக்கியமானது. ஆக, இரண்டு பேருமே நமக்கு இரண்டு விதமான பலம். 
தந்தை பெரியாரை அல்லது டாக்டர் அம்பேத்கரை மறுதலிப்பது யாருக்கு லாபம்? எதற்காக மறுதலிக்கிறார்கள்?
பெரியாரை மறுப்பவர்கள் யார் தெரியுமா? அம்பேத்கரை மறுப்பவர்கள். அதன் உண்மை! தந்தை பெரியாரை மறுப்பது யாருக்கு பலமா போய் சேரும் என்றால், ஜாதி இந்துக்களுக்கு பலமா போய் சேரும். ஏன்னா? தாழ்த்தப்பட்டவர்கள், ஜாதி ஒழிப்பு போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் புரட்சியாளர் அம்பேத்கரை தலைமையாக வைத்திருக்கிறோம். பொது சமூகத்தில் இருக்கிறவர்கள் ஜாதி ஒழிப்பு அரசியலுக்கு வரணும்னா பெரியாருடைய சிந்தனைதான் அடிப்படை. அவர்கள் பெரியாரை படிச்ச பிறகு அதை சரியாக உள்வாங்கிட்டாங்கன்னா அம்பேத்கரிடம் வந்து சேர்ந்துவிடுவார்கள். பொது சமூகம் புரட்சியாளர் அம்பேத்கரை வந்து சேரணும்னா பெரியார்தான் நுழைவாயில்.  அம்பேத்கரை எதிர்காலத்தில் மறுத்தா மட்டும்தான் இங்கே மிகப்பெரிய சாதி கலவரங்களை ஏற்படுத்த முடியும். இது ஆதிக்க சாதி இந்துக்களின் மிகப்பெரிய வேலைத்திட்டம். 

தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பாலும் RSS, இந்து முன்னணி போன்ற சக்திகளுக்கு செல்லக்கூடிய காரணங்கள் என்ன? 
வறுமை - அதிகாரமற்ற நிலையில் இருக்கும் ஒரு சமூகம், தன்னை விடுவித்துக் கொள்ள இரண்டு வேலைதான் செய்யும். ஒன்று தன்னை யார் எதிர்க்கிறார்களோ அவர்களை நெஞ்சுறுக்கி எதிர்க்கும். இரண்டு பணிந்துவிடும். பணிவது என்பது ரொம்பவும் குறைவுதான். இங்கே இரண்டு தலித்துகள் இருக்கிறார்கள். ஒன்று கார்ப்பரேட் தலித்துகள் இரண்டாவது காலனி தலித்துகள். கார்ப்பரேட் தலித்துகள் நிறைய கருத்துரிமை பேச துவங்கி இருக்கிறார்கள். தலித் விடுதலைக்கு அவர்களால்தான் ஆபத்து இருக்குது. அவர்கள் மக்கள்கிட்ட போய் வேலை செய்யமாட்டார்கள். மாறாக, கல்லூரியில் படித்த தலித்துகிட்ட போய் அமைப்பை தொடங்குவார்கள். வடமாநிலங்களில் இந்துத்துவா இளைஞர்கள் எப்படி வேலை செய்தார்களோ? அதுபோல. இப்ப அதற்கான வேலை இங்க நடந்துகிட்டு இருக்கு. தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகளை ஒழிப்பதற்கும், மாயாவதி போன்ற தலைவர்களின் கட்சிகளை ஒழிப்பதற்கும் மிகப்பெரிய வேலை நடந்திகிட்டு இருக்கு. அதற்கு அவர்கள் யாரைப் பயன்படுத்துறங்கனா, தலித்துகளைதான். புதுசா வருகின்ற அமைப்புகள் மீதுதான் நீங்கள் சந்தேகப்பட்டாகனும். அவர்களுக்கு பணம் ஏது? பின்னால் இருப்பவர்கள் யார்? என்பதை கண்காணிக்க வேண்டும். அந்த கார்ப்பரேட் தலித்துகள் மீது ரொம்ப கவனமா இருக்க வேண்டும். ஏன்னா? அவன்தான் நம் தத்துவத்தை காலிபன்னுவான். 
புத்த நெறியை பற்றி அதிகமான உரையாடல்கள் தலித் இளைஞர்கள்கிட்ட தொடங்கியிருக்கிறதே. அதற்கும், நீங்கள் குறிப்பிடுகிற கார்ப்பரேட்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?
அதைத்தான் சொல்றேன். இங்கு இரண்டு புத்திஸ்டு இருக்கிறான். புத்திஸ்டா இருக்கிறவன் கண்டிப்பா பார்ப்பனியத்தை எதிர்க்கனும். இதை எதிர்க்காத புத்திஸ்டுகளிடம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும். அவன்தான் ரொம்ப ஆபத்தானவன். புரட்சியாளர் அம்பேத்கர் இந்தியாவில் இரண்டே இரண்டு சண்டைதான் இருக்குது என்கிறார். இது என்னனா? பவுத்தர்களுக்கும், ஆரியர்களுக்கும் நடந்த சண்டை. கார்ப்பரேட் தலித்துகளால் உருவாக்கப்பட்ட புத்திஸ்டுகள் எப்பொழுதும் பார்ப்பனியத்தை எதிர்ப்பது இல்லை... சாதி இந்துக்களை எதிர்ப்பது இல்லை... இந்து மதத்தை எதிர்ப்பது இல்லை. ஆனால், தன்னை புத்திஸ்டுன்னு சொல்லிக்கிறாங்க. இது எப்படி சரி? இவர்களிடம் தான் நாம எச்சரிக்கையா இருக்கனும்.
ஒருபக்கம் ராஜலட்சுமி - சவுமியா, போன்ற சிறுமிகள் மீதான பாலியல் வன்கொலைகள், மறுபுறம் நந்தீஸ் - சுவாதி போன்றவர்களின் மீதான ஆணவப் படுகொலைகள் எப்படி பார்க்குறீர்கள்?
இது எல்லாமே தலித்துகள் மீது நடத்தப்படுகிற படுகொலைகள்தான்.    ஆதிக்க சாதிகளால் தலித்துகளுக்கு பேராபத்து நிகழ்ந்தா சட்டம் அவர்களை பாதுகாக்கும், துன்புறுத்தினால் தண்டிக்கப்படுவார்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய வேலை இங்கே நடக்கல. ஏன்னா? ஆதிக்க சாதிகளுக்கும் சாதி இந்துக்களுக்கும் இந்த அரசுதான் துணையா இருக்குது. ஆதிக்க சாதிகள் என்று சொல்லிக்கொள்கிற சமூகத்தில் இருந்து ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டாள், உடன்படலன்னு கழுத்து அறுத்து கொல்லப்பட்டாள் அப்படின்னு எங்கயாவது உங்களால் காட்டமுடியுமா? 
ஒரு தலித் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆதிக்க சாதிகள் முடிவு செய்கிறார்கள். தலைமுறை தலைமுறை அந்த எண்ணம் வளர்த்தெடுக்கப்படுகிறது. அதனால்தான் நான் கூப்பிட்டா நீ படுக்கமாட்டியா..? உன் கழுத்தறுத்துப் போட்டுறேன் நீ என்ன பண்ணுவ? என்று கூறிட்டே 13 வயசான அந்த சின்னப்புள்ளைய கழுத்தறுத்துட்டு போயிட்டே இருக்கிறான். உலகத்துல வேறுயாருக்கு எந்த சமூகத்துக்கு இதுபோல நடக்கும்? அந்த மனதைரியமும், அந்த பக்குவமும் எங்கிருந்து உருவாச்சுன்னு நினைக்கிறீங்க? சாதி அவனுக்கு உருவாக்கி வைச்சிருக்கு. அப்போ சாதிய ஒழிக்கலைன்னா ராஜலட்சுமிக்கு நடந்த கொடுமை எல்லோருக்கும் நடந்துகிட்டே இருக்கும். ஆணவ கொலைகள் நடந்துகிட்டே இருக்கும். ஆசையா வளர்த்த தன்னுடைய மகள் வேறு சாதிக்காரனோடு போயிட்டான்னா அந்த பெண்ணின் பெற்றோருக்கு என்ன நெருக்கடினு நெனைக்கிறீங்க? அவர்கள் சார்ந்திருக்கும் சாதிய சமூகத்தில் தலைநிமிர்ந்து நிற்கமுடியாத அளவுக்கு அந்த சாதிக்காரர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள். அதனால தன்னை தூய்மையானவனாகவும் தான் சார்ந்த சாதிக்காக கடமைப்பட்டவர்களாகவும் காட்டிக்கொள்ள தான் பெற்ற பிள்ளையை கொல்லும் மனநிலைக்கு  ஆளாகிறார்.  அதனால் எல்லா வேலையையும் நிறுத்திட்டு, சாதியை ஒழிப்பதை தவிர நமக்கு வேறு வேலையில்லை என்பதை உணர்ந்து செயல்படாத வரை இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வராது.

நிருபயா-ஸ்வாதி கொலைகளுக்கு கேள்விகேட்டு போராடிய பொதுசமூகம், அஷிஃபா - நந்தினி கொலைகளின் போது மவுனம் காத்ததே?
ஆதிக்க சாதியில் இருக்கற பெண்ணுக்கு ஒரு பிரச்சனைனா அணிதிரள்வதற்கும், தலித் பெண்களுக்கோ, இஸ்லாமிய பெண்களுக்கோ ஆபத்து என்றால் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும் சாதிதான் காரணம். வேறு என்ன? பொது சமூகத்தில் இருக்கும் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கும் உட்படுத்தப்பட்டா நம்ம சமூகத்தில் இருக்கற பெண் பாதிக்கப்பட்டுட்டா இந்தியா முழுவதும் அணிதிரளனும்னு நினைக்கிறாங்க. அன்றைக்கு டெல்லியில் ஒருங்கிணைந்து சோனியாகாந்தி வீட்டு முன்பு நின்னு போராடியவர்களெல்லாம் யாருன்னு நினைக்கிறீங்க..? அவர்களுக்கு தெரியாதா டெல்லியில் வேறு யாரும் தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படலையான்னு..? அதைப்பற்றி தெரியாதுன்னு சொன்னாங்கனா அதைவிட வேதனைக்குரியது வேறு என்ன இருக்க முடியும். 
ஓட்டரசியல் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
ஓட்டரசியலில் எனக்கு நம்பிக்கை கிடையாது. இந்த நாட்டின் மீது மூலதனம் செலுத்தப்பட்ட முதலாளிகளுக்கு பிரதிநிதிகளாக இந்த அரசியல்வாதிகள் இருப்பார்களே ஒழிய மக்களின் அடிப்படை தேவைகளுக்குக்கூட, சின்னச் சின்ன சீர்திருத்தங்கள், மாற்றங்கள் செய்வதற்குக்கூட இது பயன்படாது.   இந்த தேர்தலே கார்ப்பரேட்டுகளுக்காக நடத்தப்படுகிறது. அப்ப நீங்க வாக்களிப்பீங்களா...? எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைச்சா தேர்தலில் நிப்பிங்களான்னு கேட்டா, கண்டிப்பா வாக்களிப்பேன் தேர்தலிலும்கூட நிப்பேன். ஏன்னா இதுக்குள்ள போய் நாம் ஏதாவது செய்திட முடியுமானு பார்ப்பேன். அது ஒரு நம்பிக்கைதான். புரட்சியின் மீது எனக்கிருக்கிற முழுமையான நம்பிக்கை, எப்போதும் ஓட்டரசியல் மீது கிடையாது. தற்போதைய பாரளுமன்ற - சட்டமன்ற தேர்தலின் வழியாக அதிகாரத்தை பெறுவதற்கான பயிற்சியை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இது ரொம்ப சமரசமான பிற்போக்குத்தனமான உண்மையாக இருந்தாலும், ஆனால், இதுமட்டும்தான் நிகழும் என்கிற மோசமான விளைவு இதற்குள் இருக்கிறது. பாரளுமன்ற - சட்டமன்ற ஏதாவது செய்துவிடும் என்கிற நம்பிக்கையை வெறும் பிரச்சாரத்தின் மூலம் மாற்றிவிட முடியாது. என்ன பண்ணலாம்னா திரும்ப திரும்ப வாக்களித்து வாக்களித்து ஒரு கட்டத்தில் மக்களுக்கு சலிப்பு ஏற்படும் போது நம்முடைய எல்லா திட்டங்களும் நிறைவேறும். 

அடுத்து ஒரு முக்கியமான கேள்வி சுயஜாதி பெருமை அனைத்து மட்டங்களிலும் வந்துவிட்டதே அதை எப்படி பார்க்கிறீர்கள்?
சுயஜாதி பெருமை எப்போதும் எனக்கு நம்பிக்கை கிடையாது. புரட்சியாளர் அம்பேத்கர் மட்டும்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மிகச் சரியாக பட்டியலின ஜாதிகள் (ஷிமீபீuறீtமீபீ சிணீstமீ) என்று பெயர் வைத்தார். ஏன் வைத்தார்னா நீ எந்த ஜாதி அடையாளத்துக்குள்ளும் உன்னை அடையாளப்படுத்திக்கக்கூடாது. அட்டவனைப்படுத்தப்பட்ட இந்த ஜாதிகள் எல்லாமே ஆதிக்க ஜாதிகளால் ஒடுக்கப்படுது. இந்த அட்டவனைப்படி ஒருங்கிணைந்து பிரச்சனைகளை எதிர்கொள்ளாதவரை உங்களால் விடுதலை பெற முடியாது என்பதை புரிந்து கொள்வதற்குத்தான் பட்டியலின ஜாதிகள் (ஷிமீபீuறீtமீபீ சிணீstமீ) என்று பெயர் வைத்தார். சுயஜாதி பெருமை பற்றி பேசுவதற்கான எந்த வாய்ப்பையும் அவர் தரவேயில்லை. 
படித்த தலித் இளைஞர்களிடம் சுயஜாதி பெருமை பேசுவது அதிகமாகி உள்ளதே?
அப்படினா புரட்சியாளர் அம்பேத்கரை அவன் படிக்கலைன்னுதான் அர்த்தம். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஒருபக்கம் ஜாதியால் ஏற்படும் இழுக்கிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதேநேரத்தில் ஆதிக்க ஜாதிகளைப் போலவே சுயஜாதி சாயல்கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களால் ஜாதி ஒழியாது, இவர்கள் ஜாதியை ஒழிப்பார்கள் என்ற நம்பிக்கை எப்பொழுதும் கிடையாது.

நீங்கள் படைப்பாளியாகவும் ஒரு அமைப்பில் பொறுப்பாளராகவும் சமதளத்தில் இயங்குகிறீர்கள், இதில் ஏதும் இடர்ப்பாடு வருவதில்லையா?
படைப்பாளியா இருக்கற நான் சோறு சாப்பிடனுமில்ல, படைப்பாளிய இருக்கற நான் கவிதைகளையும், கதைகளையும் எழுதி எழுதி சாப்பிடறனா? சோறு தானே சாப்பிடறேன். அந்த சோறு நூறு விவசாயிகளால், தொழிலாளிகளால் உருவாக்கப்பட்டது. அவர்களைப் பற்றிய விடுதலையைப் பற்றி பேசுவதுதானே என்னுடைய படைப்பா இருக்கனும். நான் ஒரு விவசாயி குடும்பத்த சேர்ந்தவன் தான் சோறு எங்கிருந்து வந்ததுன்னு எனக்கு தெரியுமில்ல. அப்ப என் படைப்பு அவர்களுக்கானதாகத்தானே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தொழிலாளிகளுக்கு.
படங்கள் - வழக்கறிஞர் குணா & அபு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக